தாயை மானபங்கம் செய்து குழந்தையை முட்புதரில் வீசி கொலை செய்த வாலிபர்கள்
சிதம்பரம்: சிதம்பரம் அருகே இளம்பெண்ணை இரண்டு வாலிபர்கள் காட்டுப் பகுதிக்குக் கடத்திச் சென்று கற்பழித்தனர். அப்போது இடையூறாக இருந்த அந்தப் பெண்ணின் 2 வயது குழந்தையை அவர்கள் முட்புதரில் வீசி கொலை செய்துள்ளனர்.
திருக்கோயிலூர் அருகே ரிஷிவந்தியத்தைச் சேர்ந்த பாபுவின் மனைவி இன்பநிலா (23). இவர்களது 2 வயது மகன் தமிழ்ச்செல்வன். பாபுவும் இன்பநிலாவும் பெங்களூரில் தங்கி கட்டிட வேலை செய்து வருகின்றனர்.
இவர்களுடன் சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகையைச் சேர்ந்த வசந்தி என்பவரும் வேலை பார்த்து வந்தார். சில தினங்களுக்கு முன் இவர்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்குத் திரும்பினர்.
வல்லம்படுகையில் உள்ள வசந்தியை பார்க்க நேற்றிரவு இன்பநிலா தனது குழந்தையுடன் சிதம்பரத்திலிருந்து பஸ்ஸில் சென்றுள்ளார். இரவு நேரமானதால் இடம் தெரியாமல் வல்லம்படுகைக்குப் பதிலாக சில கி.மீ. தள்ளியிருக்கும் வேலக்குடி என்ற இடத்தில் அவர் இறங்கியுள்ளார்.
அங்கிருந்து வல்லம்படுகைக்கு குழந்தையுடன் நடந்து வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரு வாலிபர்கள் இன்பநிலாவைப் பார்த்துவிட்டு வண்டியை நிறுத்தி விசாரித்தனர்.
வல்லம்படுகையில் விடுவதாக கூறி அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டனர்.
சிறிது தூரம் சென்றதும் காட்டுப் பகுதிக்குள் வண்டியை ஓட்டிச் சென்று இன்பநிலாவை பலாத்காரம் செய்துள்ளனர்.
அப்போது குழந்தை தமிழ்ச்செல்வன் அழுததால், குழந்தையை முட்புதரில் வீசியுள்ளனர். இதையடுத்தும் இன்பநிலாவை தொடர்ந்து மானபங்கம் செய்துவிட்டு தப்பிவிட்டனர்.
முட்புதரில் இறந்து கிடந்த குழந்தையை எடுத்துக் கொண்டு இன்பநிலா இரவு 2 மணிக்கு அண்ணாமலை நகர் காவல் நிலையத்திற்கு வந்து இது தொடர்பாக புகார் கொடுத்தார்.
குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார், இன்பநிலாவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
தாயை கற்பழித்து, குழந்தையை கொலை செய்த வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.