இந்தியாவில்தான் காஷ்மீரிகளுக்குப் பாதுகாப்பும், கெளரவமும் நிலைக்கும்-ப.சிதம்பரம்

காஷ்மீர் நிலவரத்தை நேரில் கண்டு ஆராய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு இன்று ஸ்ரீநகர் வந்து சேர்ந்தது.இரண்டு நாள் பயணமாக காஷ்மீர் வந்துள்ள இந்தக் குழு, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் போராட்டக் குழுக்களின் பிரதிநிதிகளுடன் ஸ்ரீநகரில் ஆலோசனை நடத்தவுள்ளது. நாளை ஜம்முவுக்கும் இக்குழு பயணம் மேற்கொள்கிறது.
காஷ்மீரில் அமைதி திரும்ப என்ன செய்யலாம் என்பது குறித்து அரசுக்கு இந்தக் குழு பரிந்துரைக்கவுள்ளது.
ப.சிதம்பரம் தலைமையிலான இந்த 39 பேர் கொண்ட குழுவில் இந்தியாவின் முக்கிய கட்சிகள் பலவும் அங்கம் வகித்துள்ளன. காஷ்மீரின் ஹூரியத் மாநாட்டுக் கட்சி இதைப் புறக்கணித்து விட்டது.
பேச்சுவார்த்தைக்கு வருமாறு பிரிவினைவாத தலைவர்களான கிலானி, மீர்வைஸ் உமர் பாரூக், யாசின் மாலிக் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதை அவர்கள் நிராகரித்து விட்டனர்.
இருப்பினும் கிலானியை மட்டும் வீட்டுக்கே போய் சந்திக்க இந்தக் குழுவினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இந்தக் குழுவில் ப.சிதம்பரம் தவிர சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி, முலாயம் சிங்யாதவ், ராம் விலாஸ் பாஸ்வான், சரத் யாதவ், இ.அகமது, டி.ஆர்.பாலு, குருதாஸ் தாஸ் குப்தா, பாசுதேவ் ஆச்சார்யா, ராஜ்நிதி பிரசாத் தம்பிதுரை, தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
ஸ்ரீநகர் வந்தடைந்த பின்னர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜம்மு காஷ்மீர் மாநில மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தைக் கொடுக்க அனைவரும் உறுதி பூண்டுள்ளோம். இந்தியாவில் உள்ள காஷ்மீரில்தான் சிறந்த எதிர்காலமும், பாதுகாப்பும், கெளரவமும் நிலைக்கும் என்பதை காஷ்மீரிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
காஷ்மீர் மக்களின் அனைத்துக் குறைகளையும் கேட்க நாங்கள் ஆர்வமாக உள்ளோம் என்றார் சிதம்பரம்.
தேவைகளை பூர்த்தி செய்வோம்-பாலு:
ஸ்ரீநகர் கிளம்பும் முன் செய்தியாளர்களிடம் பேசிய திமுகவைச் சேர்ந்த டி.ஆர்.பாலு கூறுகையில்,
போராடிக்கொண்டிருக்கின்ற மக்களை அழைத்து கலந்துரையாடி, அவர்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்து பேசி, அந்த தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்காக குழு அமைக்கப்பட வேண்டும் என்று திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதை பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக ஏற்றுக்கொண்டு, அனைத்துக் கட்சி குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு காஷ்மீர் மக்களிடம் கலந்துரையாடி அவர்களின் உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறது. அதேபோல் நாளை ஜம்மு பகுதிக்குச் சென்று அங்குள்ள மக்களை சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து மத்திய அரசுக்கு அறிக்கையாக தரப்படும். மத்திய அரசு இதுகுறித்து முக்கிய முடிவு எடுக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications