அயோத்தி தீர்ப்பை தாமதப்படுத்தக் கூடாது-அத்வானி
வரும் 28ம் தேதி இந்த விஷயத்தில் தீர்ப்பு வழங்க அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி தரும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.
20 ஆண்டுகளுக்கு முன் இந்த தினத்தில் தான் (செப்டம்பர் 25, 1990) அயோத்திக்கு தனது ரத யாத்திரையை அத்வானி தொடங்கினார். குஜராத்தில் உள்ள சோம்நாத் சிவன் கோவிலில் இருந்து யாத்திரை தொடங்கிய இந்த தினத்தையொட்டி இன்றும் அந்தக் கோவிலில் அத்வானி வழிபாடு செய்தார். அவருடன் பாஜகவிலிருந்து விலகிய உமா பாரதியும் கோவிலுக்கு வந்தார்.
வழிபாட்டுக்குப் பின் நிருபர்களிடம் பேசிய அத்வானி,
அயோத்தி நில விவகாரம் தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 24ம் தேதி தீர்ப்பு வழங்க இருந்த நிலையில் அதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது ஆச்சரியமளிக்கிறது.
நான் நீதித்துறையை மதிக்கிறேன். ஆனால், வழக்குப் போட்டவர்களும் நாட்டு மக்களுக்கு தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கும்போது உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது ஏன் என்பது எனக்குப் புரியவில்லை.
வரும் 29ம் தேதி அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வசதியாக, வரும் 28ம் தேதி உச்ச நீதிமன்றம் தனது இடைக்காலத் தடையை விலக்கிக் கொள்ளும் என்று நம்புகிறேன்.
நீதிமன்றத்தை மதித்து பஜக தொண்டர்களும் மக்களும் அமைதி காக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
கோவில் நிச்சயம் கட்டப்படும்-பாஜக:
இதற்கிடையே அயோத்தியில் நிச்சயம் கோவில் கட்டப்படும் என்றும், நீதிமன்ற தாமதங்களால் தான் அங்கு 61 ஆண்டுகளாக கோவில் கட்டுவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் பாஜக தெரிவித்துள்ளது.
அயோத்தி தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், அங்கு கோவிலைத் தவிர வேறு எந்த வழிபாட்டுத் தலமும் கட்டப்படக் கூடாது என்று என்று ஆர்எஸ்எஸ், விஸ்வ இந்து பரிஷத் ஆகியவை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன.
ஆனால் இந்த விஷயத்தில் பாஜகவிடம் அமைதி நிலவி வந்தது. இந் நிலையில் இந்த விவகாரம் குறித்து பாஜக உயர் மட்டக் கூட்டம் டெல்லியில் கட்சியின் தலைவர் நிதின் கட்காரியின் வீட்டில் நடந்தது.
கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய கட்சியின் செய்தித் தொடர்பாளரான அருண் ஜேட்லி,
கடந்த 61 ஆண்டுகளாக இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. ஆனாலும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக எந்தவித தீர்வும் ஏற்படவில்லை.
அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவது என்ற எங்களின் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை. இனியும் இந்த வழக்கில் தாமதம் இருக்காது என்று நம்புகிறோம் என்றார்.
விஸ்வ இந்து பரிஷத் திட்டவட்டம்:
முன்னதாக விஸ்வ இந்து பரிஷத்தின் உயர்மட்டக் குழுக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய அதன் தலைவர் அசோக் சிங்கல், தீர்ப்பு இந்துக்களுக்கு பாதகமாக வந்தால் கடும் எதிர்விளைவுகள் இருக்கும். அந்த இடத்தில் கோவிலைத் தவிர வேறு எந்த மதவழிபாட்டுத் தலமும் கட்டப்படக் கூடாது.
அங்கு கோவிலைக் கட்ட ஜனநாயகரீதியில் இந்து சமூகம் தயாராக வேண்டும். மசூதி கட்ட முயற்சி நடந்தால் அதை எல்லா சக்தியையும் கொண்டு எதிர்க்க வேண்டும் என்றார்.