பெரியகோவில் 1,000 ஆண்டு விழா: தஞ்சையில் கருணாநிதி
தஞ்சாவூர்: கோவில்களில் தேவாரத் திருமுறைகளுடன், தமிழில் வழிபாடு நடைபெற வழிவகுத்தது திமுக அரசு தான் என்று துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
தஞ்சை பெரிய கோவிலின் 1,000 ஆண்டு நிறைவு விழா கடந்த 22ம தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று இந்த விழாவில் பங்கேற்க முதல்வர் கருணாநிதி விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து கார் மூலம் தஞ்சாவூர் செல்கிறார்.
மாலை நடைபெறும் விழாவிலும், நாளை ஆயுதப்படை மைதானத்தில் நடக்கும் நிறைவுவிழா நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்கிறார்.
விழாவையொட்டி தஞ்சை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. பெரிய கோவில் கோபுரங்கள், அரண்மனை, மணிமண்டபம், தொல்காப்பியர் சதுக்கம், கோவில்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
திராவிட கலையின் சிகரம் பெரிய கோயில்-ஸ்டாலின்:
இந்த விழாவையொட்டி, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இந்தியப் பெருமைக்கு தஞ்சையின் பங்களிப்பு என்ற தலைப்பில் ஆய்வரங்கம் நடந்தது.
அதில் பேசிய துணை முதல்வர் ஸ்டாலின், பிற்காலச் சோழர்களில் மிகச் சிறந்த மன்னராகவும், உலக வரலாற்றில் பேரரசன் என்னும் அடைமொழியைப் பெற்றவராகவும் விளங்கிய தமிழ் மன்னர் முதலாம் ராஜராஜன்.
இவரது ஆட்சியில் தமிழகம் பல புதுமைகளைக் கண்டது. அரசு நிர்வாகம், வேளாண்மை, கலைகள் சிறக்க பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை ராஜராஜன் மேற்கொண்டார். இவரது ஆட்சியில் சைவ, வைணவ சமயங்கள் மட்டுமன்றி, அனைத்து சமயங்களுக்கும் முக்கியவத்துவம் அளிக்கப்பட்டது.
ராஜராஜன் கட்டிய பெரிய கோயில் அவருக்கு வரலாற்றுச் பெரும புகழைத் தேடித் தந்தது. கி.பி. 1003ம் ஆண்டில் தொடங்கி, கி.பி. 1010ம் ஆண்டில் இக்கோயிலின் கட்டுமானப் பணி நிறைவடைந்தது.
1,000 ஆண்டுகளுக்குப் பின்னும் நிலைத்து நின்று, தமிழனின் கட்டடக் கலை மாண்பை பறைசாற்றும் இந்த பெரிய கோயிலுக்கு இணையான ஒரு முழுமையான கட்டமைப்பை இந்தியாவில், ஏன் உலகிலேயே வேறெங்கும் காண முடியாது.
சோழ மன்னர்கள் ஆட்சியின் சிற்பக் கலை வல்லமையைக் காட்டும் அரிய பல சிற்பங்களும் இக்கோயிலில் இடம் பெற்றுள்ளன. கோயிலின் கருவறையைச் சுற்றி அமைந்துள்ள திருச்சுற்று மாளிகையில் சோழர்கால ஓவியங்கள் காணப்படுகின்றன. முதல் தளச் சுற்றிலும் 81 நாட்டியச் சிற்பங்களுடன் ஓவியங்கள் இருந்ததற்கான சுவடுகள் காணப்படுகின்றன.
இப்படி கட்டடக்கலை, நாட்டியக் கலை, சிற்பக் கலை, இசைக் கலை, ஓவியக்கலை உள்ளிட்ட அனைத்துக் கலைகளுக்கும் நிலைக்களனாக அமைந்த ஒரு பல்கலைக்கூடமாக ராஜராஜன் இத் திருக்கோயிலைக் கட்டியுள்ளார்.
பெரிய கோயிலைக் கட்டி, அதில் நாள்தோறும் தமிழில் வழிபாடு நடத்த வேண்டுமென கருதி, தமிழ் வழிபாட்டுக்காக திருமுறைகளை இசையோடு பாட ஓதுவார்களை நியமித்து, அவர்களுக்கு ஊதியம் வழங்கவும் செய்தவர் ராஜராஜன்.
காலப்போக்கில் தமிழ் வழிபாடு முறை மறைந்து, வடமொழியில் வழிபாடுகள் செய்யும் நிலை ஏற்பட்டு, நிரந்தரமாகி, ராஜராஜன் விரும்பிய தமிழ் வழிபாட்டு முறை தடைபட்டு விட்டது.
அதன் பின்னர், 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழகத்தில் எழுந்த மொழி இனமான உணர்வுகள் காரணமாகத்தான், திருக்கோயில்களில் தமிழிலும் வழிபாடு செய்யப்படும் என ஓர் அட்டையை மட்டும் தொங்கவிட்டனர்.
அந்த நிலையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் திமுக அரசு தமிழிலும் என்பதில் உள்ள "உம்' என்பதை நீக்கி, தமிழில் வழிபாடு நடத்தப்படும் என ஆணை பிறப்பித்தது.
இது தேவாரத் திருமுறைகளுடன் இந்தப் பெரிய கோயிலிலும், தமிழகத்தில் உள்ள ஏனைய திருக்கோயில்களிலும் தமிழில் வழிபாடு நடைபெற வழிவகுத்தது என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications