பெண்ணுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய பிஎஸ்எப் ஜவான்-மன்னிப்பு கேட்டதால் விட்டனர் போலீஸார்
சென்னை: சென்னையைச் சேர்ந்த பெண்ணுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி தொல்லை கொடுத்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். ஆனால் அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதால் அந்தப் பெண் அவரை மன்னித்தார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்தவர் சுஹாசினி. இவரது செல்போனுக்கு அடிக்கடி ஆபாச எஸ்எம்எஸ் வந்தது. இதையடுத்து அந்த எண்ணைத் தொடர்பு கொண்டு பேசினார் சுஹாசினி. மறு முனையில் பேசிய நபர், மிகவும் ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுஹாசினி அந்த நபரை எச்சரித்தார்.
இருப்பினும் தொடர்ந்து எஸ்எம்எஸ் வந்தபடி இருந்தது. இதையடுத்து தனது கணவருடன் அபிராமபுரம் போலீஸ் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்தார் சுஹாசினி.
போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். சுஹாசினியை விட்டு அந்த நபருக்கு போன் செய்து நைஸாக சென்னைக்கு அழைக்குமாறு அறிவுறுத்தினர்.அவரும் பேசி சென்னைக்கு வந்தால் பேசலாம் என்று கூறினார்.
இதையடுத்து சுஹாசினி குறிப்பிட்டுச் சொன்ன இடத்திற்கு அந்த நபர் டிப்டாப்பாக வந்து இறங்கினார்.அப்போது மறைந்திருந்த போலீஸார் அந்த நபரைப் பிடித்து காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்தனர்.
அங்கு வைத்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றி வருகிறார்.விடுமுறைக்காக வந்த இடத்தில் இப்படி ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளார்.
சபலபுத்தியால் இப்படிச் செய்து விட்டேன். இனிமேல் செய்ய மாட்டேன். மன்னித்து விடுங்கள் என்று காலில் விழுந்து கெஞ்சினார் அந்த 'வீரர்'. இதையடுத்து அவரை மன்னித்து விட்டுவிடுமாறு போலீஸாரிடம் தெரிவித்தார் சுஹாசினி.
இருப்பினும் ஜாமீனில் வெளிவரக் கூடிய சட்டப் பிரிவில் ஒரு வழக்கைப் பதிவு செய்து அந்த வீரரை எச்சரித்து அனுப்பினர் போலீஸார்.