ரூ. 149 கோடியில் இலவச சைககிள் திட்டம்-கருணாநிதி தொடங்கி வைத்தார்
சென்னை: ரூ. 149.58 கோடி மதிப்பீட்டில் 5.68 லட்சம் மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி இன்று தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை
தமிழகத்திலுள்ள அரசு- அரசு உதவி பெறும்-அரசின் ஒரு பகுதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 11ஆம் வகுப்பில் பயிலும் ஆதிதிராவிட, பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் உள்ளிட்ட அனைத்து சமுதாயங்களையும் சார்ந்த மாணவ-மாணவிகள் அனைவருக்கும் இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின்கீழ் நடப்பாண்டில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 108 மாணவர்களுக்கும், 3 லட்சத்து 17 ஆயிரத்து 251 மாணவிகளுக்குமாக மொத்தம் 5 லட்சத்து 68 ஆயிரத்து 359 மாணவ, மாணவியர்க்கு 149 கோடியே 58 லட்சம் ரூபாய் செலவில் இலவச மிதிவண்டிகளை வழங்கிட முதல்வர் கருணாநிதி ஏற்கனவே ஆணையிட்டிருந்தார்.
அந்த ஆணையின்படி, மாணவர்களுக்கான ஒரு மிதிவண்டி ரூபாய் 2670 விலையிலும், மாணவிக ளுக்கான ஒரு மிதிவண்டி ரூபாய் 2555 விலையிலும், மொத்தம் 149 கோடியே 58 லட்சம் ரூபாய் செலவில் 5 லட்சத்து 68 ஆயிரத்து 359 மிதிவண்டிகள் ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப்புள்ளி முறையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
முதல்வர் கருணாநிதி இன்று (6.10.2010) புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற விழாவில் 7 மாணவர்களுக்கும், 7 மாணவிகளுக்கும் இலவச மிதி வண்டிகளை வழங்கி வாழ்த்துகள் கூறி, தமிழகம் முழுவதிலும் மிதிவண்டிகள் வழங்கும் பணிகளைத் தொடங்கி வைத்தார். மிதிவண்டிகளைப் பெற்றுக்கொண்ட மாணவ- மாணவிகள் முதல்வர் கருணாநிதிக்கு மிகுந்த மகிழ்ச்சியுடன் தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தமிழரசி, தலைமை செயலாளர் மாலதி, ஆதிதிராவிடர் நலத்துறை முதன்மைச் செயலாளர்விஸ்வநாத் ஷெகாங்கர், பள்ளிக்கல்வி துறைச்செயலாளர், தேவஜோதிஜெகராஜன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளர், ராமநாதன், ஆதிதிராவிடர் நல ஆணையர் சிவசங்கரன், பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர், பஷீர் அஹமது, மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை ஆணையர் அண்ணாமலை, பழங்குடியினர் நல இயக்குநர் இரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications