இந்திராகாந்தி நினைவு வீடு கட்டும் திட்டப் பணியில் மோசடி-அதிகாரி கைது !
மன்னார்குடி: இந்திராகாந்தி நினைவு வீடு கட்டும் திட்டப்பணியில் நீடாமங்கலம் யூனியன் அலுவலக முன்னாள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செக் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் யூனியன் அலுவலகத்தில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு ராம்குமார் (48) என்பவர் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்தார்.
இவர் பணியின் போது செக் மோசடி செய்திருப்பதை அறிந்த திருவாரூர் மாவட்ட நிர்வாகம் அவரை சஸ்பெண்ட் செய்தது. அதன் பிறகு அரசியல் செல்வாக்கு மூலம் அவர் மீண்டும் நீடாமங்கலம் யூனியனில் பணியில் சேர்ந்தார்.
இந்திராகாந்தி நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் 18 ஆயிரம் ரூபாய்க்கு தனது பெயரில் செக்கை பூர்த்தி செய்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாகிருஷ்ணன் போட வேண்டிய கையெழுத்தை, ராம்குமாரே போட்டுக் கொண்டு வங்கியில் பணம் மாற்ற சென்றார்.
கையெழுத்து மாறி இருப்பதை அறிந்த வங்கி நிர்வாகம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாகிருஷ்ணனை தொடர்பு கொண்டு கேட்ட போது , ராம்குமார் மோசடி கையெழுத்து போட்டிருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து, ராதாகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில்,துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்குமாரை நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்தி கைது செய்தார்.