சென்னை சிறுவன் கொலை: குற்றப்பத்திரிக்கையை வாங்க மறுத்த பூவரசி
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயக்குமாரின் காதலி பூவரசி. ஆனால் அவர் பூவரசியை மணக்காமல் வெறும் உடல் ஆசைக்கு மட்டும் அவரை பயன்படுத்திக் கொண்டார். தே சமயம், பூவரசியோடு சேர்த்து காதலித்த ஆனந்தலட்சுமியை கல்யாணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளையும் பெற்றுக் கொண்டார்.
ஆனந்தி மூலம் ஜெயக்குமாருக்கு நிவேதிதா, ஆதித்யா (மூன்றரை) என இரு குழந்தைகள். இதில் ஆதித்யாவைத்தான் பூவரசி கொலை செய்து கைதாகியுள்ளார்.
ஜெயக்குமார் மூலம், பூவரசி இரண்டு முறை கர்ப்பமாகியுள்ளார். ஆனால் வலுக்கட்டாயமாக அதைக் கலைத்துள்ளார் ஜெயக்குமார். தன்னை உடல் ரீதியாக மட்டுமே ஜெயக்குமார் நேசித்து வந்ததால், விரக்தி அடைந்துதான் கொலை என்ற படு பாதகத்திற்குத் துணிந்து விட்டார் பூவரசி.
அதேசமயம், ஜெயக்குமார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காதலித்த பாவத்திற்காக ஜெயக்குமார் மீது பூவரசி எந்தப் புகாரையும் தரவில்லை.
ஜெயக்குமாரின் மகன் ஆத்தியாவை கடத்தி கொலை செய்து உடலை ஒரு சூட்கேசில் வைத்து நாகப்பட்டிணம் செல்லும் பேருந்தில் போட்டுவிட்டார் பூவரசி.
பின்னர் போலீசார் விசாரணை நடத்தியதில் பூவரசி சிக்கினார். இதையடுத்து அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கடந்த 8-ம் தேதி பூவரசி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இது தன் மீது சமத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டு என்று கூறி 81 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை வாங்க மறுத்துவிட்டார். மேலும், தான் நீதிபதியுடன் தனியாக பேச வேண்டும் என்றும் கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கை மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு மாற்றுவதாகவும், வரும் 27-ம் தேதி அங்கு ஆஜராகி பூவரசி தன் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்றும் நீதிபதி சாந்தி கூறினார். இறுதியாக பூவரசி குற்றப்பத்திரிக்கையை பெற்றுக்கொண்டார்.