மதுரையில் இன்று ஜெ ஆர்ப்பாட்டம்... பலத்த போலீஸ் பாதுகாப்பு!

மதுரையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் இந்த ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகளை அதிமுகவினர் செய்துள்ளனர்.
மதுரை பாண்டிகோவில் அருகே ரிங் ரோட்டை ஒட்டி 40 ஏக்கர் பரப்பளவில் கண்டன ஆர்ப்பாட்ட மைதானம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு அமைக்கப்பட்டுள்ள மேடையில் ஜெயலலிதா பேசுகிறார்.
அவரது வருகையையொட்டி மதுரை மாவட்டம் மற்றும் நகர் பகுதிகளில் எங்கும் பார்த்தாலும் சுவர் விளம்பரங்களும், ஆர்ப்பாட்ட போஸ்டர்களும் காணப்படுகின்றன.
சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் இன்று (திங்கட்கிழமை) பகல் 1.30 மணிக்கு மதுரை வரும் ஜெயலலிதாவுக்கு, விமான நிலையத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வரவேற்பு அளிக்கிறார்கள்.
அதன்பின் ஜெயலலிதா அங்கிருந்து கார் மூலம் பாண்டிகோவில் அருகே ரிங் ரோட்டை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள மைதானத்துக்கு வருகிறார். அங்கு மதியம் 2 மணி அளவில் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசுகிறார்.
பலத்த பாதுகாப்பு
மதுரை ஆர்ப்பாட்டத்துக்கு வரும் ஜெயலலிதாவை நிச்சயம் கொலை செய்வேன் என்று சிலர் அநாமதேய கடிதங்கள் மற்றும் மெயில்கள் அனுப்பியிருப்பதால்,
விமான நிலையம் முதல் ஆர்ப்பாட்ட திடல் வரை வழி நெடுக சீருடை அணிந்த அ.தி.மு.க. தொண்டர் படையினர் நிறுத்தப்படுகிறார்கள்.
தென்மண்டல ஐ.ஜி. கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் டி.ஐ.ஜி. சந்தீப்மிட்டல் மேற்பார்வையில் போலீஸ் சூப்பிரண்டு மனோகர் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விருதுநகர், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 7 காவல் கண்காணிப்பாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி தவிர தென்மாவட்டங்களில் இருந்து 5 கூடுதல் கண்காணிப்பாளர்கள், 25 துணை கண்காணிப்பாளர்கள், 45 இன்ஸ்பெக்டர்கள், 8 போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள், 19 சப்-இன்ஸ்பெக்டர்கள், 9 பட்டாலியன் மற்றும் உள்ளூர் போலீசார் என சுமார் 1500 போலீசார் வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். பிறமாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்து 700 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications