கடலூர் பந்த்: 14 பஸ்கள் சேதம்... தாய் - குழந்தை படுகாயம்!

பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த செப்டம்பர் 19-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு காணப்படவில்லை.
ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டத்துக்கு தி.மு.க.வைத் தவிர அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., ம.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கடலூர் மாவட்டம் முழுவதும் 19-ந் தேதி ஒருநாள் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
வணிகர் சங்கப் பேரவையும் ஆதரவு தெரிவித்திருந்தது.
அதன்படி நேற்று கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் தலைநகரான கடலூரில் லாரன்ஸ்சாலை, மஞ்சக்குப்பம், கடலூர் முதுநகர் போன்ற பகுதிகளில் ஒருசில கடைகளை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன.
கடைகள் மூடப்பட்டு இருந்தாலும் கடலூரில் பஸ்-ஆட்டோக்கள் ஓரளவுக்கு. ஆனால் குறைந்த அளவிலேயே பயணிகள் பயணம் செய்ததை காண முடிந்தது.
சினிமா காட்சிகள் ரத்து
முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு கடலூரில் உள்ள சினிமா தியேட்டர்களில் காலை மற்றும் மதியவேளை சினிமா காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன.
என்.எல்.சி. தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி கடலூர் வக்கீல்கள் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் இருந்து நேற்று காலை கடலூர் நோக்கி வந்த ஒரு தனியார் பஸ்சின் முன் பக்க கண்ணாடியை முள்ளோடை அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம மனிதர்கள் கல்வீசி உடைத்து விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதில் பஸ் டிரைவர் தாமஸ் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
அதேபோல புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்த மேலும் 3 தனியார் பஸ்களின் கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டன.
தாய்-குழந்தை படுகாயம்
நெய்வேலியில் இருந்து கடலூர் நோக்கி வந்த ஒரு தனியார் பஸ்சை கோண்டூரில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம மனிதர்கள் 2 பேர் திடீரென கல்வீசி தாக்கினார்கள்.
இதில் பஸ்சில் பயணம் செய்த நெல்லிக்குப்பம் எழுமேடு கிராமத்தை சேர்ந்த பெருமாள் மனைவி புனிதா (வயது 25), அவரது குழந்தை முரளீதரன் (2) ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
14 பஸ்கள் சேதம்
கடலூர் மாவட்டத்தில் நேற்று நடந்த முழு அடைப்பு போராட்டத்தின் போது அரசு தனியார் உள்பட 14 பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன. இதில் பெரும்பாலான பஸ்களின் மீது கல்வீசி தாக்கிய மர்ம மனிதர்கள் அனைவருமே முகத்தை கைக்குட்டையாலும், மோட்டார் சைக்கிளின் நம்பர் பிளேட்டை துணியாலும் மறைத்துக்கொண்டு இந்த செயலில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications