அமைச்சர், வாக்குச் சாவடி மீது தாக்குதல்-வன்முறையுடன் முடிந்த பீகார் 2ம் கட்ட தேர்தல்
மொத்தம் 45 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் 98.44 லட்சம் வாக்காளர்கள் கலந்து கொண்டனர். 623 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இவர்களில்46 பேர் பெண்களாவர். ஆறு மாவட்டங்களில் நடைபெறும் இத்தேர்தலுக்காக 10,315 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
காங்கிரஸும், பகுஜன் சமாஜ் கட்சியும் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. ஆளும் ஐக்கிய ஜனதாதளம் 28 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சியான பாஜக 17 தொகுதிகளிலும் களத்தில் நிற்கின்றன.
லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளம் 34 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சியான பாஸ்வானின் லோக் ஜன சக்திக் கட்சி 11 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
ஷூகர் மாவட்டத்தில் ஆறு போலீஸாரை மாவோயிஸ்ட் நக்சலைட்கள் கொன்றுள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.
சித்தமார்கி மாவட்டத்தில் ருன்னிசயத்பூர் தொகுதியில் 166வது வாக்குச் சாவடிக்குள் திடீரென மாவோயிஸ்டுகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அங்கிருந்த வாக்குப் பதிவு இயந்திரத்தை தீவைத்துக் கொளுத்தினர். பிற தேர்தல் பொருட்களையும் அடித்து
நொறுக்கி சூறையாடினர்.
பின்னர் அங்கிருந்த 3 தேர்தல் பணியாளர்களை கடத்திச் சென்றனர். அதேபோல ஒரு அமைச்சரும் தாக்கப்பட்டார்.
வன்முறை நடந்த வாக்குச் சாவடிப் பகுதிக்கு கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். அதற்குள் மாவோயிஸ்டுகள் தப்பி விட்டனர்.