நவ 1 முதல் நம்பரை மாற்றாமல் விரும்பிய செல்போன் சேவைக்கு மாறிக் கொள்ளும் வசதி!

செல்போன் எண்ணை மாற்றாமல் வேறு செல்போன் நிறுவனத்தின் சேவைக்கு மாறிக் கொள்ளும் இந்த வசதியை கடந்த ஆண்டே அறிமுகப்படுத்தியது மத்திய தொலைத் தொடர்புத்துறை.
ஆனால், செல்போன் நிறுவனங்கள் பல, அதற்கான உயரிய தொழில்நுட்ப வசதி இல்லாமல் இருந்தன. எனவே, அவை அந்த வசதியைப் பெற கால நீட்டிப்பு செய்து கொண்டே இருந்தது மத்திய அரசும். இதுவரை கிட்டத்தட்ட 4 முறை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இப்போதுதான் ஒருவழியாக அனைத்து செல்போன் நிறுவனங்கள் தங்களின் சேவையை நவீனப்படுத்தியுள்ளன.
நவம்பர் 1-ம் தேதி முதல் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் என தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா தெரிவித்திருக்கிறார். முதற்கட்டமாக இது ஹரியாணாவில் மட்டும் அமலுக்கு வருகிறது.
குறித்த செல்போன் நிறுவனம் வழங்கும் சேவை திருப்தி அளிக்கவில்லை என்றாலும் செல்போன் எண்ணை மாற்றிக் கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் தொடர்ந்து அதே நிறுவனத்தையே சார்ந்திருக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது.
இதையடுத்து, வேறு செல்போன் நிறுவனத்தின் சேவையில், ஏற்கெனவே இருக்கும் அதே செல்போன் எண்ணைப் பெற்றுக்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்த தொலைத்தொடர்புத் துறை முடிவு செய்தது.
இதனை அறிமுகப்படுத்தும் பட்சத்தில், வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு, கட்டணக் குறைப்பு உள்பட பல வசதிகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் செய்தே தீர வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதைத் தவிர்க்கவே பல நிறுவனங்கள் தாமதப்படுத்தி வந்தன என்பதுதான் இந்த சேவை இன்னும் வராமலிருக்கக் காரணம் என்கிறார்கள் இத்துறையைச் சேர்ந்த நிபுணர்கள்












Click it and Unblock the Notifications