பாமகவில் தொடர் புறக்கணிப்பு-காங்.குக்குத் தாவுகிறார் டாக்டர் ராமதாஸ் சகோதரர்
சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் சகோதரரான சீனிவாச கவுண்டரும், அவரது மகன் சந்திரசேகரனும், பாமகவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைகின்றனராம்.
பாமகவைப் பொறுத்தவரை நம்பர் ஒன் டாக்டர் ராமதாஸ்தான். அதேபோல நம்பர் 2 அன்புமணி ராமதாஸ். இவர்களுக்கு அடுத்து பாமகவில் நிரந்தரப் பொறுப்புகளில் இருந்து வருபவர் ஜி.கே.மணி மட்டுமே. இவர்களைத் தாண்டி காடுவெட்டி குருவுக்கும் பாமகவில் அதிக முக்கியத்துவம் உண்டு.
இந்த நிலையில், பாமகவில் தாங்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதால் அதிலிருந்து விலகி காங்கிரஸில் சேரப் போவதாக ராமதாஸின் சகோதரரான சீனிவாச கவுண்டரும், அவரது மகன் சந்திரசேகரனும் கூறியுள்ளனர்.
ப.சிதம்பரம் கோஷ்டியில் இணைகிறார்கள்:
இவர்கள் காங்கிரஸில் ப.சிதம்பரம் கோஷ்டியில் இணைகிறார்கள். இதுகுறித்து சந்திரசேகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நானும், எனது தந்தையும் பா.ம.க. கட்சி தொடங்கிய காலத்தில் இருந்தே கட்சிக்காக உழைத்து வந்தோம். எந்த வித பதவியையும் எதிர்பார்க்கவில்லை. கட்சித்தலைமை தொடர்ந்து எங்களை புறக்கணித்து வருவதாலும், கட்சி நடவடிக்கையில் இருந்து ஓரங்கப்பட்டு வருவதாலும் இதில் இருந்து விலகி காங்கிரசில் சேர முடிவு செய்துள்ளோம். எங்களுக்கு வன்னியர் சமுதாயத்தின் ஆதரவு உள்ளது என்றார்.
டாக்டர் ராமதாஸின் சம்பந்தி கிருஷ்ணசாமி. இவர் எம்.பியாக உள்ளார். இவரது மகளைத்தான் அன்புமணி கட்டியுள்ளார். இவர் காங்கிரஸில் முக்கியத் தலைவர்களில் ஒருவராக உள்ளார். அதேபோல கிருஷ்ணசாமியின் மகனும், அன்புமணியின் மச்சானுமான விஷ்ணுபிரசாத், காங்கிரஸ் கட்சியில் முக்கிய எம்.எல்.ஏக்களில் ஒருவர். இந்த வரிசையில் தற்போது ராமதாஸின் சகோதரரும், சகோதரர் மகனும் காங்கிரஸில் இணையவுள்ளனர்.
நவம்பர் 7ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் சீனிவாச கவுண்டரும், சந்திரசேகரனும் காங்கிரஸில் இணைகின்றனர். விழாவுக்கு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமை தாங்குகிறார். தங்கபாலுவும் கலந்து கொள்கிறார்.












Click it and Unblock the Notifications