காஷ்மீர்: பாஜகவை தர்மசங்கடத்தில் ஆழ்த்திய ராம் ஜேத்மலானி

பத்திரிக்கையாளர் திலீப் பட்கோங்கர், மத்திய தலைமை தகவல் ஆணையர் எம்.எம்.அன்சாரி, கல்வியாளர் பேராசிரியர் ராதா குமார் ஆகியோர் கொண்ட இந்தக் குழு காஷ்மீர் மக்களின் அபிலாஷைகள், கோரிக்கைகள் தொடர்பாக பல்வேறு தரப்பினருடனும் ஆலோசனை நடத்தி வருகிறது.
காஷ்மீருக்குப் பயணம் செய்வதற்கு முன் இக்குழுவினர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்துபோது, இந்தப் பிரச்சனையில் பாகிஸ்தானை சேர்க்காமல் தீர்வு காண்பது மிகவும் சிரமம் என்று கருத்துத் தெரிவித்தது.
இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தும் முன்பே பிரிவினைவாதிகளான ஹூரியத் மாநாட்டுக் கட்சிக்கு ஆதரவாளர் த்லீப் பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது என்றும்,
இதற்கு உரிய விளக்கத்தை பிரமதர் அளிக்க வேண்டும் என்றும் பாஜக கூறியுள்ளது.
மேலும் இந்தப் பிரச்சனையை மிகவும் குழந்தைத்தனத்தோடு கையாண்டு இதை சர்வதேச விவகாரமாக்கும் முயற்சியில் இக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர் என்றும் பாஜக கூறியுள்ளது.
ஆனால், பாஜகவின் இந்தக் கருத்தை அக் கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்பியான ராம் ஜேத்மலானி கண்டித்துள்ளார்.
அவர் கூறுகையில், திலீப் படகோங்கர் தலைமையிலான குழுவுக்கு மிகப் பெரிய சவலான பணி அளிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் பிரச்சனைக்கு அமைதியான நிரந்தர தீர்வைக் காண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இது மனித முயற்சிகளுக்கு அப்பாற்பட்டது. இருப்பினும் இதில் அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.
இந்த பணியில் அவர்கள் ஓரளவு வெற்றி பெற்றால்கூட அவர்களுக்கு இந்த நாடே மிகுந்த நன்றிக்கடன் பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் ஆகியோரும் சமீபத்தில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அகமது ஷா குரேஷி ஆகியோர் காஷ்மீர் குறித்து பேச்சு நடத்தியுள்ளனர். 1972ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சிம்லா ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சு நடத்தியாக வேண்டும். இந்த விவகாரத்தில் பாகிஸ்தானை நாம் தவிர்க்கவே முடியாது.
மத்திய அரசு நியமித்துள்ள பேச்சுவார்த்தைக் குழுவுக்கு அனைத்துத் தரப்பினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் . இதில் அரசியல் செய்து பலனில்லை. நான் பாஜகவின் கருத்தை எல்லா நேரத்திலும் ஆதரிக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்றார்.
மூவர் குழுவை வாபஸ் பெற வேண்டும் என்றரீதியில் பாஜக பேசி வரும் நிலையில், அந்தக் குழுவுக்கு நாடே நன்றிக் கடன் பட்டுள்ளதாக ஜேத்மலானி கூறியுள்ளது பாஜகவை பெரும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications