நிதீஷ் குமார் ஒரு சந்தர்ப்பவாதி-சோனியா விளாசல்
பெகுசராய்: பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ஒரு சந்தர்ப்பவாதி. தனது அரசு செய்யும் தவறுகளுக்கு மத்திய அரசை குறைசொல்கிறார் என்று கூறியுள்ளார் சோனியா காந்தி.
பீகாரில் 6 கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் நேற்றோடு 3 கட்ட வாக்குப் பதிவு முடிந்தது.
நேற்று பெகுசராய், பகல்பூர் ஆகிய இடங்களில் நடந்த பிரசாரக் கூட்டங்களில் சோனியா காந்தி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், முதல்வர் நிதீஷ் குமார் ஒரு சந்தர்ப்பவாதி. சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபட்டு வருகிறார். மதவாத சக்திகளுடன் கைகோர்த்துக் கொண்டிருக்கிறார். இதன் மூலம் தான் மதச்சார்பற்றவன் என்று அவர் கூறுவதை ஏற்க முடியாது.
பீகார் அரசு இயந்திரம் அனைத்து நிலைகளிலும் தோல்வி அடைந்து விட்டது. சுகாதாரம், கல்வித் துறைகளில் பீகார் மிகவும் பின் தங்கியுள்ளது. மத்திய அரசிடமிருந்து கோடிக்கணக்கில் நிதியைப் பெற்றும் அவற்றை பீகார் அரசு சரிவரப் பயன்படுத்தவில்லை.
எங்கு பார்த்தாலும் ஊழல் புகார்களாக உள்ளன. இதைத் தடுக்க உருப்படியான நடவடிக்கை எதையும் பீகார் அரசு எடுக்கவில்லை.
தான் செய்யும், தனது அரசு செய்யும் தவறுகளுக்கும், அரசின் தோல்விகளுக்கும், வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்தாதற்கும் மத்திய அரசை குறை கூறித் தப்பிக்கப் பார்க்கிறார் நிதீஷ் குமார் என்றார் சோனியா.