மோகனகிருஷ்ணன் என்கெளன்டரை எதிர்த்து கோவை வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
கோவையில் சிறார்கள் முஷ்கின், ரித்திக் ஆகியோரைக் கொன்ற இரு கொலையாளிகளில் ஒருவரான மோகன கிருஷ்ணனை கோவை அருகே வைத்து நேற்று போலீஸார் என்கெளன்டரில் சுட்டுக் கொன்றனர். போலீஸ் அதிகாரிகளை துப்பாக்கியால் சுட்டதாலும், தப்பி ஓட முயன்றதாலும், அவனை தற்காப்புக்காக சுட்டுக் கொன்றதாக கோவை போலீஸ் கமிஷனர் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தை கோவையில் பொதுமக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். முஷ்கின், ரித்திக்கின் பெற்றோர்களும் வரவேற்றுள்ளனர்.
இந்த நிலையில் கோவை கோர்ட் வளாகத்தில் வக்கீல்கள் சிலர் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மனித உரிமைகளை மீறும் வகையில் போலீஸார் இப்படி நடந்து கொண்டது கண்டனத்துக்குரியது என்று அவர்கள் கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அதேசமயம், இவர்களின் போராட்டத்தை எதிர்த்து இன்னொரு பிரிவு வக்கீல்கள் கூறி போலீஸாரின் செயலைப் பாராட்டி கோஷமிட்டதால் அங்கு மோதல் மூளும் நிலை ஏற்பட்டது. இந்தப் பிரிவு வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக பொது மக்களும் திரண்டனர். அவர்கள் எண்கெளண்டரை எதிர்த்த வக்கீல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்து கோஷங்கள் இட்டனர்.
மேலும் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளும் நடந்தது. இதில் ஒருவர் கீழே தள்ளப்பட்டு காயமடைந்தார். இந்த போட்டி போராட்டத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. இருப்பினும் பெரிய அளவில் அமளி ஏதும் ஏற்படவில்லை.