முறைகேடாக ஒதுக்கப்பட்ட 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் ரத்து செய்யப்பட வேண்டும்-சிபிஐ
அக் கட்சியின் தலைமைச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்று ராசா ராஜினாமா செய்தது மட்டுமே தீர்வாகாது. கடந்த சில ஆண்டுகளாகவே, நாட்டுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படும் வகையில் குற்றம் நடந்துள்ளது.
இதில் ராசாவின் பங்கு உள்பட முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் உள்பட அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும்.
முறைகேடாக ஒதுக்கப்பட்ட உரிமங்கள் ரத்து செய்யப்பட வேண்டும். பிரதமர் அலுவலகத்துக்கு தெரியாமல் தொலைதொடர்புத் துறையில் இந்த அளவுக்கு பெரிய முறைகேடு எப்படி நடந்தது? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
ராசா ராஜினாமா முடிவல்ல-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி நிருபர்களிடம் கூறுகையில்,
ராசாவின் ராஜினாமா என்பது பிரச்சனைக்கு முடிவல்ல. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் பாரபட்சமற்ற விசாரணை நடத்த வசதியாக அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று நாங்கள் கூறி வந்தோம். தற்போது, அவர் ராஜினாமா செய்திருக்கிறார். எனவே இப்போது விசாரணையை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
தேசத்துக்கு இவ்வளவு பெரிய இழப்பு ஏற்படக் காரணமாக இருந்தவர்களை கண்டறிந்து தண்டிக்க வேண்டும். இந்த ஊழலில் ஏராளமான தனி நபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் தொடர்புள்ளது.
நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடங்கிப் போனதற்கு எதிர்க்கட்சிகளை குறை சொல்லக் கூடாது. கடந்த 6 மாதங்களாக இந்தப் பிரச்சனை தீவிரமாகிக் கொண்டே வந்தது.
உச்ச நீதிமன்றமே அமைச்சர் பதவியில் ராசா தொடரலாமா என்று கேள்வி எழுப்பியது. இதனால் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கும் முன்பே, அவர் ராஜினாமா செய்திருந்தால் நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கும். எனவே, இப்போதைய சூழ்நிலைக்கு மத்திய அரசே முழு காரணம் என்றார் யெச்சூரி.
முழு விசாரணைக்கு முலாயம்-சரத் யாதவ் கோரிக்கை:
சமாஜ்வாடி கட்சித் தலைவர் முயலாம் சிங் யாதவ் நிருபர்களிடம் கூறுகையில், ராசா ராஜினாமாவால் என்ன மாற்றம் நிகழ்ந்து விட்டது?. இந்த ஊழலில் மிக ஆழமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே நாட்டு மக்களின் கோரிக்கை. எங்களின் விருப்பமும் அதுவே என்றார்.
ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் கூறுகையில், ராசா ராஜினாமா செய்திருப்பது, எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த வெற்றி. இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரி மத்திய அரசுக்கு தீவிர நெருக்கடி குறித்து பாஜக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்றார்.