ரத்தாகும் 85 நிறுவனங்களின் 2 ஜி உரிமங்கள்
டெல்லி: 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற 122 நிறுவனங்களில் தகுதி குறைந்த 85 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் ரத்து செய்யப்படுகின்றன.
ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக மத்திய தணிக்கை துறை வெளியிட்ட அறிக்கை நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல்வேறு முறைகேடுகள் குறித்து சுட்டிக் காட்டப்பட்டு உள்ளன.
2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மொத்தம் 122 பேருக்கு வழங்கப்பட்டு இருந்தது. இதில் 85 நிறுவனங்கள் 2 ஜியைப் பெற தகுதி இல்லாதவை என்று மத்திய தணிக்கை துறை கூறியுள்ளது.
சில நிறுவனங்கள் முறைப்படி விண்ணப்பிக்கவில்லை. சிறு நிறுவனங்கள் தவறான தகவல்களைக் கொடுத்து இருந்தன. வேறு சில நிறுவனங்கள் விண்ணப்பிக்க தகுதியற்று நலிவடைந்தவையாக இருந்தன. ஆனாலும் இந்த நிறுவனங்களுக்கு ஸ்பெக்டரம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
அனைத்து விண்ணப்பங்களுமே சரியாக இருக்கிறதா? தகுதி இருக்கிறதா? என்று அதிகாரிகள் குழுவால் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வும் முறையாக நடக்கவில்லை. ஏனோ தானோ என்று ஆய்வு நடந்து இருக்கிறது என தணிக்கை துறை குற்றம்சாட்டியுள்ளது.
13 நிறுவனங்கள் போலி ஆவணங்களை கொடுத்து விண்ணப்பித்து இருந்தன. அதையும் கூட ஆய்வு செய்தவர்கள் கண்டுகொள்ளவே இல்லை.
விண்ணப்பங்களை ஆய்வு செய்வதற்கு போதிய ஆட்கள் நியமிக்காததும், அனுபவம் உள்ளவர்களை நியமிக்காததும்தான் இதற்கு காரணம் என்றும் தணிக்கை துறை கூறியுள்ளது. இந்த தவறுக்கு அதிகாரிகளும் முக்கிய காரணம் என்றும் தணிக்கை துறை குற்றஞ்சாட்டி இருக்கிறது.
எனவே தகுதி இல்லாத 85 நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்ட லைசென்சை ரத்து செய்ய தொலை தொடர்பு துறை முடிவு எடுத்து உள்ளது. இதுபற்றி சட்ட நிபுணர்களுடன் தொலைத் தொடர்புத் துறை ஆலோசனை நடத்தி வருகிறது. தணிக்கை அதிகாரிகளிடமும் ஆலோசனை நடக்கிறது.
முதலில் 85 நிறுவனங்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இதை தொடர்ந்து மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
லைசென்சு பெற்ற சில நிறுவனங்கள் அதற்குரிய கட்டணங்களை செலுத்தாமல் உள்ளன. நிபந்தனைபடி இந்த நிறுவனங்களின் உரிமத்தையும் ரத்து செய்ய உள்ளனர்.
ஸ்வான் டெலிகாம்:
ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் தொலை தொடர்பு நிறுவனம் சம்பந்தப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம் ஸ்வான் என்ற பினாமி நிறுவனம் பெயரில் விண்ணப்பித்து உள்ளது. இதில் முழுமையான தகவல்கள் பூர்த்தி செய்யப்படவில்லை. தவறான தகவல்களும் கொடுக்கப்பட்டிருந்தன.
மேலும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற விதித்திருந்த நிபந்தனைபடி இந்த நிறுவனத்துக்கு உரிமம் பெற தகுதி இல்லை. ஆனாலும் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. எனவே இந்த நிறுவன உரிமமும் ரத்து செய்யப்படுகிறது.