பழனியில் பக்தர்களை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய ரவுடி கைது
பழனி : பழனி அடிவாரத்தில், கார்த்திகை திருவிழாவையொட்டி குவிந்த பக்தர்களை, வெளிநாட்டுத் துப்பாக்கியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டிய ரவுடி ஜாபர் என்பவரை போலீஸார் வளைத்துப் பிடித்தனர்.
பழனியில் இன்று பெரிய கார்த்திகையையொட்டி பெருமளவில் பக்தர்கள் குவிந்துள்ளனர். இந்த நிலையில் அடிவாரம், ரவுண்டானா பகுதியில் ஒரு நபர் கையில் துப்பாக்கியுடன் பக்தர்களை அணுகி, பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
இதைப் பார்த்து பக்தர்கள் பயந்து ஓடினர். ஆனாலும் விடாத அந்த நபர் துப்பாக்கியுடன் விரட்டியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போனது.
உடனடியாக போலீஸார் அந்தப் பகுதிக்கு விரைந்தனர். துப்பாக்கியுடன் பக்தர்கலை மிரட்டி, விரட்டிய நபரை மிகவும் சாதுரியமாக செயல்பட்டு மடக்கிப் பிடித்தனர். பின்னர் அந்த நபரை காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
அங்கு வைத்து நடந்த விசாரணையில், அந்த நபரின் பெயர் ஜாபர் என்பது தெரிய வந்தது. இவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த கரடி மணி என்ற பிரபல ரவுடியின் கும்பலைச் சேர்ந்தவர்.
கடந்த 2006ம் ஆண்டு பூத்தாம்பட்டி முருகன் என்பவரைக் கொல்ல முயன்றபோது வெட்டிப் படுகொலை செய்யப்பட்டவர் கரடி மணி.
அதன் பின்னர் தனிப்பெரும் கிரிமினலாக மாறினார் ஜாபர். கடந்த பத்து வருடமாக அவர் தலைமறைவாக திரிந்து வந்தார். கொலை, கொள்ளை ஆகியவற்றில் ஈடுபட்டு வந்தார். அவர் மீது பெரம்பலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏராளமான கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சனிக்கிழமை இரவு ஒட்டன்சத்திரத்தில் ஒரு வழிப்பறியில் ஈடுபட்டு விட்டு பழனிக்கு வந்த ஜாபர், அங்கு பக்தர்களிடம் தனது கைவரிசையைக் காட்ட முயன்றோது பிடிபட்டார்.
அவரிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கியும், 5 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த துப்பாக்கி வெளிநாட்டைச் சேர்ந்த நவீன துப்பாக்கி என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஜாபருடன் இன்னொரு நபரும் வந்ததாக தெரிகிறது. அவரை போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications