ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமர் பெயரை இழுத்தவர் ராஜாதான், நாங்கள் இல்லை-எச்சூரி
டெல்லி: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கின் நேர்மையை நாங்கள் சந்தேகிக்கவில்லை. ஆனால் அவரது செயலற்ற போக்கைத்தான் கண்டிக்கிறோம். இந்த விவகாரத்தி்ல பிரதமர் பெயரை ராஜா இழுத்துள்ளதால்தான், அவரை நாங்கள் கேள்வி கேட்க நேரிட்டுள்ளது என்று சிபிஎம் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் எச்சூரி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ராஜாவுக்கும், பிரதமருக்கும் இடையே நிறைய கடிதப் போக்குவரத்து நடந்துல்ளது. அதேபோல தொலைத் தொடர்புத்துறைக்கும், பிரதமருக்கும் இடையேயும் கடிதப் போக்குவரத்து நடந்துள்ளது.
இந்த விவகாரத்தில் பிரதமரையும் பிரச்சினைக்குள் இழுத்து விட்டுள்ளார் ராஜா. மேலும், மத்திய அரசும்தான் பிரதமர் பெயர் இதில் அடிபட முக்கிய காரணம். எனவே நாங்கள் பிரதமரையும் கேள்வி கேட்டுத்தான் ஆக வேண்டும்.
மேலும், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தொலைத் தொடர்புத்துறையின் பதில் மனுவில், பிரதமருடன் கருத்து வேறுபாடு இல்லை, நடந்த அனைத்தும் பிரதமருக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது. எனவே பிரதமர்தான் இதில் விளக்கமளிக்க வேண்டும்.
இந்த சர்ச்சைக்கு தீர்வு காண ஜேபிசி விசாரணை ஒன்றுதான் ஒரே வழி. மாபெரும் ஊழலுக்கு வித்திட்ட சூழ்நிலை எது என்பது கண்டுபிடிக்கப்பட வேண்டியுள்ளது. அதை பொதுக் கணக்கு கமிட்டியால் முழுமையாக கண்டுபிடிக்க முடியாது. ஜேபிசி விசாரணையால் மட்டுமே அது முடியும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications