திருச்செந்தூர் முருகன் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா விமரிசையாக நடந்தது. இத்திருவிழைவையொட்டி அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தன.
மாலை 6.30 மணிக்கு முதல் பிரகாரத்தில் 108 மகாதேவர் சன்னதியில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளியதும் திருவிளக்குப் பூஜை நடந்தது.
இதனைத் தொடர்ந்து மூலவர், சண்முகர் மற்றும் பரிவார மூர்த்திகள் சன்னதிகளில் நாரண தீபம் ஏற்றப்பட்டது.
பின்பு அருள்மிகு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளியபோது தீபாராதனை நடைபெற்றது.
இதனையடுத்து கோவில் எதிர்புறம் உள்ள கடற்கரையில் இரவு 7.25 மணிக்கு சொக்கப்பனையில் நாரணி தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.