நெல்லை, தூத்துக்குடியில் கன மழை: 10 வீடுகள் சேதம்
தூத்துக்குடி: நெல்லை, தூத்துக்குடி மாவட்டக்களில் கன மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பதாலும் மழையளவு அதிகரித்துள்ளது.
பல இடங்களில் மழை நீடிப்பதால் கால்வாய்களில் நீர்வரத்து அதிகரித்து ஏரி, பாசன குளங்கள் நிரம்பத் துவங்கியுள்ளன. மேலும் நிலத்தடி நீர் மட்டமும் உயரத் துவங்கியுள்ளது. இதுவரை மாவட்டம் முழுவதும் மழைக்கு 10 வீடுகள் சேதமடைந்துள்ளன என வருவாய் துறையினர் கணக்கெடுத்துள்ளனர்.
மழை காரணமாக உப்பளங்களில் நீர் தேங்கியுள்ளதால் உப்பு உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், வெளிமாநிலங்கள் மற்றும் நாடுகளுக்கு உப்பு ஏற்றுமதி செய்யும் பணியும் தேக்கமடைந்துள்ளது. மீனவர்கள் பெரும்பாலானோர் மீன்பிடிக்க செல்லவில்லை. மழை காரணமாக முக்கிய காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது.
மாவட்டத்தின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் அதிக மழை பெய்துள்ளது என்று மானாவாரி விவசாயிகள் மகிழும் நிலையில் தெற்கு மற்றும் தென்கிழக்கு, தென்மேற்கு பகுதிகளில் போதிய மழை இல்லை.
இதனால் நெல், வெற்றிலை, வசம்பு பயிரிடும் விவசாயிகள் மழையை எதிர்நோக்கியுள்ளனர். நெல்லையில் நேற்று காலை முதல் மதியம் வரை வெயிலடித்த நிலையில் மாலையில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.












Click it and Unblock the Notifications