சாதிவாரி சென்ஸஸ்: முதல்வரை சந்தித்த சமுதாய தலைவர்களுக்கு ஏமாற்றம்-ராமதாஸ்

ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறி்க்கையில், எழுத்தறிவு, கல்வித் தகுதி உள்ளிட்ட சமூகப் பொருளாதார விவரங்களை ஒருங்கிணைத்து சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை ஓராண்டு காலத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா தலைமையிலான மூன்று நீதிபதிகளைக் கொண்ட பெஞ்ச் உத்தரவிட்டு, நான்கு மாதங்கள் முடிந்து விட்டன.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அந்த குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நிறைவேற்றி முடிக்கவேண்டும் என்று முதலமைச்சரிடம் நானும், நாற்பதுக்கும் மேற்பட்ட சமுதாயச் சங்கத் தலைவர்களும்முறையீடு செய்து ஒன்றரை மாதம் முடிவடைந்து விட்டது.
மாநில பிற்படுத்தப்பட்டோர் நலஆணையத்தின் தலைவருடனும், சம்பந்தப்பட்ட அரசுத்துறை செயலாளர்களுடனும் இதுதொடர்பாக முதல்வர் ஆலோசனை கலந்துள்ளார்.
இந்த ஆலோசனை நடைபெற்று ஒரு மாதமாகிறது. ஆனால் நம்பிக்கையுடன் எதிர்பார்த்தப்படி, மாநிலத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான அரசாணை இதுவரை பிறப்பிக்கப்படவில்லை.
முதல்வரைச் சந்தித்த அனைத்து சமுதாயத் தலைவர்களுக்கும் இது ஏமாற்றம் அளித்துள்ளது.
மாநிலத்தில் உள்ள அனைத்து சமுதாய மக்களின் சமூக பொருளாதார நிலை குறித்த நம்பகமானஆதாரங்கள் திரட்டப்பட வேண்டும்; அப்படி திரட்டப்படும் ஆதாரங்களின் அடிப்படையில் திட்டங்கள் தீட்டப்பட்டு வளங்களும், வாய்ப்புகளும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
இதற்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காகதான் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
இந்தக் கோரிக்கையை மாநிலத்தில் உள்ள அனைத்து சமுதாயங்களும் ஏற்றுக் கொள்கின்றன. இதனை எதிர்ப்பார் யாரும் இல்லை. முதலமைச்சருக்கும் இதில் உடன்பாடு இருக்கிறது.இருந்தாலும், அதற்கான ஆணையைப் பிறப்பிப்பதற்கு எது தடையாக இருக்கிறது என்பது புரியவில்லை.
2011ம் ஆண்டின் மாதத்தில் மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறது. இந் நிலையில் மாநில அரசு தனியாக ஏன் இந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும்? என்று கருதலாம்.
ஆனால் நமது மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் கணக்கெடுப்பிற்கும், மத்திய அரசு நடத்தப் போகும் கணக்கெடுப்பிற்கும் வித்தியாசம் இருக்கிறது.
மத்திய அரசு மேற்கொள்ள இருக்கும் கணக்கெடுப்பிற்குப் பிறகு நமக்கு கிடைப்பதெல்லாம், சாதிகளின் தலைக் கணக்கு மட்டும்தான். ஆனால் மாநிலத்தில் இடஒதுக்கீடு சலுகைப் பெறும் வகுப்பினரை அளவிடக்கூடிய அனைத்து புள்ளி விவரங்களும் அடங்கிய கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள கட்டளையாகும்.
இந்த இரண்டிற்கும் நிரம்ப வித்தியாசம் இருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் கட்டளைப்படி அடுத்தாண்டு ஜூலை மாதத்திற்குள் அவர்கள் திருப்தியடைகிற புள்ளிவிவரங்களோடு கூடிய கணக்கை மாநில அரசு அளிக்கத் தவறினால் 69 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஆபத்து ஏற்பட்டு விடும் நிலைமை நமக்கு இருக்கிறது. மத்திய அரசுக்கு இந்த நிர்பந்தம் இல்லை.
பல்வேறு கல்வியாளர்கள், அறிஞர்கள் சுட்டிக்காட்டியபடி மத்திய அரசின் கணக்கெடுப்பு நிறைவு பெறாமல் பாதியிலேயே நின்று விடக்கூடிய ஆபத்தும் இருக்கிறது. அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் அதை நம்பிய காரணத்தினால் தமிழக அரசும் சிக்கலில் மாட்டிக் கொள்ளும்.
இதுதான் தருணம் என்று எண்ணி, இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் நமது இடஒதுக்கீட்டு சட்டத்திற்கு வேட்டு வைத்து விடுவார்கள்.
கடந்த காலங்களில் வேறு சில பிரச்சனைகளில் காலம் தாழ்த்தியதன் விளைவாக தமிழகம் பல்வேறு சிக்கல்களில் சிக்கி தவிக்கிறது.
இதற்கு யார் காரணம் என்று ஒருபுறத்தில் அறிக்கைப் போர் நடந்து கொண்டிருக்கிறது. அதுபோன்ற ஒருநிலை இடஒதுக்கீட்டு சட்டத்திற்கும் வந்துவிடக் கூடாது.
எனவே தாமதமின்றி தமிழகத்தில் அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசு உத்தரவிட வேண்டும். அதன் அடிப்படையில் இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்தி, புதிய சட்டம் இயற்ற வழிவகுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
பாமக தொழிற்சங்கத்தை ஆதரிக்க கோரிக்கை:
அவர் விடுத்துள்ள இன்னொரு அறிக்கையில், தமிழகத்தின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தால் அங்கீகரிப்பட்ட பாட்டாளி தொழிற்சங்கம் குறுகிய காலத்தில் நிர்வாகத்துடன் போராடி பல கோரிக்கைகளை நிறைவேற்றி சாதனை புரிந்துள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும். ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு பணப் பயன் ஓய்வு பெறும் நாள் அன்றே வழங்கப்பட வேண்டும். 8 மணி நேர வேலை போன்ற கோரிக்கைகளை பெற்றுத்தர பாட்டாளி தொழிற்சங்கம் வாக்குறுதி அளிக்கிறது.
எனவே போக்குவரத்து தொழிலாளர்களுக்காக பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க தகுதிப் படைத்த தொழிற்சங்கத்தை தேர்வு செய்யும் தேர்தலில் பாட்டாளி தொழிற்சங்கத்தை தேர்வு செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications