மழை வெள்ள சேதம்-நிவாரணப் பணிகளுக்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு
மழை, வெள்ள சேதம், நிவாரணப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் கருணாநிதி இன்று ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் ரூ. 100 கோடி நிவாரண நிதியை ஒதுக்கீடு செய்து அவர் உத்தரவிட்டார்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு...
முதலமைச்சர் கருணாநிதி தற்போது பெய்துவரும் வடகிழக்குப் பருவமழையினால் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்து, புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று (30.11.2010) ஆய்வு செய்தார்.
பெருமழையினால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில், மாவட்ட ஆட்சியர்கள் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாய் வீதமும்; உயிரிழந்த கால்நடைகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வரையிலும்; தேவையான இடங்களில் உணவு வழங்கியும் தொடர்ந்து நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
தண்ணீரில் மூழ்கியுள்ள பயிர்களை மதிப்பீடு செய்து, சேதம் குறித்த அறிக்கை அனுப்பும் பணியில் மாவட்ட ஆட்சியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். பாலங்கள், சாலைகள், ஏரிகள் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள சேதங்களை தற்காலிகமாகச் சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், குடிசைகளை இழந்தோருக்கு - முழுமையான அளவில் குடிசைகள் சேதம் அடைந்திருந்தால், ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 2 ஆயிரம் ரூபாய் என்பதை 5 ஆயிரம் ரூபாயாகவும்; பகுதியாக குடிசைகள் சேதமடைந்திருந்தால், ஏற்கனவே வழங்கபட்டு வந்த ஆயிரம் ரூபாய் என்பதை 2 ஆயிரத்து 500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் கருணாநிதி இன்று ஆணையிட்டுள்ளார்.
இந்தப் பெருமழையினால் ஏற்பட்டுள்ள பேரிடர் தொடர்பான நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக முதற்கட்டமாக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் கருணாநிதி இன்று அறிவித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.