சவுதி அதிகாரிகளை விஷ சென்ட் கொடுத்து கொல்ல அல்கொய்தா திட்டம்
லண்டன்: சவுதி அரபிய அரசு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை விஷம் கலந்த வாசனைப் பொருட்கள் கொடுத்து கொலை செய்ய அல்கொய்தா தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு்ள்ளது.
அவர்கள் வங்கிகளையும், பெரிய நிறுவனங்களையும் கொள்ளையடிக்கவும் திட்டமிட்டிருந்ததாக சவுதி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சில மாதங்களில் 149 அல்கொய்தா தீவிரவாதிகளை கைது செய்துள்ளதாக கடந்த மாதம் சவுதி தெரிவித்தது. அவர்கள் சவுதி அரசு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளைத் தாக்க பணம் மற்றும் ஆள் சேர்த்துக் கொண்டிருந்தனர் என்று அது மேலும் தெரிவித்தது.
விசாரணையில் கைதானவர்கள் விஷம் கலந்த வாசனைப் பொருட்களை அதிகாரிகளுக்கு அனுப்பி அவர்களை கொல்லத் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது என்று உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.
கைதானவர்களில் 124 பேர் சவுதியைச் சேர்ந்தவர்கள், 25 பேர் வெளிநாட்டவர்கள். அவர்களுக்கு சோமாலியா மற்றும் ஏமன் தீவிரவாதிகளுடன் தொடர்பு உண்டு என்று உள்துறை அமைசச்கம் கடந்த மாதம் தெரிவித்தது.
கடந்த 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவன் தான் செய்த குற்றத்திற்கு வருந்துவது போல் நடித்து சவுதியின் தீவிரவாத ஒழிப்பு படையின் தலைமை அதிகாரியான இளவரசர் முஹம்மது பின் நயீபை கொல்ல முயன்றான. ஆனால் அவர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.