நெருக்கடி அதிகரிப்பு-இன்று பதவி விலகுவாரா ஊழல் கண்காணிப்பு ஆணையர் தாமஸ்?
பி.ஜே.தாமஸ் தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், மிகப் பெரிய ஊழல் வழக்கில் சிக்கி குற்றம் சாட்டப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்த ஒருவர், எப்படி ஊழல் கண்காணிப்பு ஆணையராக செயல்பட முடியும், ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை எப்படிக் கையாள முடியும் என்று சரமாரியாக கேள்வி எழுப்பியது.
இதற்குப் பதிலளித்த மத்திய அரசு, ஸ்பெக்ட்ரம் வழக்கில் தாமஸ் தலையிட மாட்டார் என்று விளக்கம் அளித்தது. ஆனால் இதை உச்சநீதிமன்றம் நிராகரிக்கும் என்று தெரிகிறது. நாளை தாமஸ் வழக்கு விசாரணைக்கு வருகிறது.
இதனால் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் கடும் கண்டனத்தை மத்திய அரசு சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே அதற்கு முன்பாகவே தாமஸ் விலக வேண்டும் என மத்திய அரசு விரும்புவதாக தெரிகிறது. எனவே இன்று தாமஸ் விலகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை தாமஸ் விலகாவிட்டால் அவரை நீக்கும் நடைமுறைகளை மத்திய அரசு தொடங்கலாம் என்று தெரிகிறது.
கேரள மாநிலத்தில் மாநில உணவுத்துறை செயலாளராக தாமஸ் பணியாற்றியபோது 1992ம் ஆண்டு நடந்த பாமாயில் இறக்குமதி ஊழல் வழக்கில் சிக்கினார் தாமஸ். ரூ. 2.8 கோடி ஊழல் வழக்கில் தாமஸ் 8வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் தாமஸுக்கு மிக முக்கியப் பங்கு இருப்பது ஆவணங்கள் மூலம் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் தாமஸை காப்பாற்றும் நோக்கிலேயே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது மத்திய அரசு.
ஸ்பெக்ட்ரம் ஊழலை பெரிதாக்கி மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி அலுவலகமே, இந்த வழக்கில் நடந்த ஊழலையும் அம்பலப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.