மும்பை தாக்குதல்-சாட்சிகளை விசாரிக்க பாக்.குக்கு அனுமதி
டெல்லி: மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவ வழக்கின் சாட்சிகளை விசாரிக்க பாகிஸ்தானுக்கு இந்தியா அனுமதி தரவுள்ளதாக கூறப்படுகிறது.
மும்பை தாக்குதல் சம்பவத்தின் மூளைகள், அதை ரிமோட் கன்ட்ரோல் மூலம் நிறைவேற்றிய பயங்கரவாத தலைவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோரி நமது நாடு பலமுறை கோரிக்கை விடுத்தும் அதை பாகிஸ்தான் கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் மும்பையில் நடந்து வரும் வழக்கில், சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளவர்களை பாகிஸ்தான் விசாரிக்க இந்தியா அனுமதி தரப் போகிறதாம்.
விரைவில் இதற்காக பாகிஸ்தானிலிருந்து ஒரு குழு இந்தியா வரவுள்ளதாம். இவர்கள் வழக்கின் முக்கிய சாட்சிகளை சந்தித்து பேசுவார்களாம். மேலும் முக்கிய அதிகாரிகளையும் இவர்கள் சந்தித்துப் பேசுவார்களாம்.
மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ள சிலர் தொடர்பாக இவர்களிடம் பாகிஸ்தான் குழு விசாரிக்கவுள்ளதாம்.
அடுத்த வாரம் இந்த சந்திப்புக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் குழு சந்திக்கவுள்ளவர்களில் முக்கியமானவர்களாக கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் ஆர்.வி. சவந்த் வகுலே மற்றும் விசாரணை அதிகாரி ரமேஷ் மஹளே ஆகியோர் ஆவர். இவர்கள்தான் அஜ்மல் கசாப்பின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தவர்கள் ஆவர். மேலும் தாக்குதலில் ஈடுபட்டு கொல்லப்பட்ட 9 தீவிரவாதிகளின் உடல்களைப் பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர்களையும் பாகிஸ்தான் குழு சந்திக்குமாம்.