பீகாரில் பிறந்து ஒரு மாதத்திற்குள் 90,000 குழந்தைகள் மரணம்
பாட்னா: ஒவ்வொரு ஆண்டும் பீகார் மாநிலத்தில் சுமார் 90, 000 குழந்தைகள் பிறந்த ஒரு மாதத்திற்குள் இறந்து விடுவதாக என்று அம்மாநில முதன்மை சுகாதார அதிகாரி சி. கே. மிஷ்ரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
ஆண்டு தோறும் பீகாரில் சுமார் 90, 000 குழந்தைகள் பிறந்த ஒரு மாதத்திற்குள் இறந்துவிடுகின்றன. ஒவ்வொரு நாளும் 250 குழந்தைகள் இறக்கின்றன. இதில் பெருமாபாலான குழந்தைகளின் இறப்பைத் தடுக்க முடியும்.
இறப்பு விகிதம் இவ்வளவு மோசமாக இருப்பதற்கான காரணத்தைக் கண்டறிந்து, நிறைய குழந்தைகள் இறப்பதற்குரிய காரணங்களைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் முடியும்.
யூனிசெப்புடன் இணைந்து பீகார் அரசு பச்சிளம் குழந்தை பராமரிப்புத் திட்டத்தை உருவாக்கியுள்ளது. இன்னும் 3 ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் தேசிய பச்சிளம் குழந்தை பராமரிப்பு அமைப்பு உருவாக்கப்படும்.
பச்சிளம் குழந்தை பராமரிப்புத் திட்டத்தின் கீழ் பச்சிளம் குழந்தைகளைக் காக்கத் தேவையான அனைத்து பராமரிப்பும் செய்யப்படும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6,000 பச்சிளம் குழந்தைகளை காப்பாற்ற முடியும் என்று அவர் கூறினார்.
பீகார் அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைகளை யூனிசெப் சுகாதார நிபுணர்கள் பாராட்டியுள்ளனர். அதேசமயம், பச்சிளம் குழந்தைகளுக்கு கூடுதல் பராமரிப்பு அளித்து குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைக்குமாறு அது அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
பீகாரில் 2010-ம் ஆண்டை பச்சிளம் குழந்தைகளின் ஆண்டாக கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications