மழை தொடர்ந்தால் ஒரு பயிர் கூட மிஞ்சாது: சாலைகளை அரசு சீரமைக்க வேண்டும்-நல்லகண்ணு
திருவையாறு: தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து பெய்த மழை அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மேலும் மழை பெய்தால் ஒரு பயிர் கூட மிஞ்சாது என்று இந்திய கம்யூனிஸ்ட் தேசிய கட்டுப்பாட்டுக் குழு தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.
திருவையாறு அருகே உள்ள அரசூர் பகுதியில் மழைநீரால் பாதிக்கப்பட்டுள்ள வயல்களை நல்லகண்ணு பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தஞ்சை மாவட்டம் பூதலூர், பேராவூரணி, திருக்காட்டுப்பள்ளி ஆகியவை மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியும், அழுகியும் உள்ளன. 10 நாட்கள் தொடர்ந்து மழை பெய்ததற்கே இந்த நிலை. இன்னும் மழை தொடர்ந்தால் ஒரு பயிர் கூட மிஞ்சாது.
தஞ்சை மாவட்டத்தில் ஒரு லட்சம் ஹெக்டேர் நெற்பயிரும், மேலும் காய்கறி, கொடிக்கால் போன்ற இதர சாகுபடி பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் முறையாக தூர்வாரி, மராமத்துப்பணிகளஅ மேற்கொண்டிருந்தால் இந்த நிலை வந்திருக்காது. தற்போது சாகுபடி செலவு அதிகரித்திருப்பதால் அரசு ஏக்கருக்கு ரூ. 15 ஆயிரம் நிவாரணமாகக் கொடுத்தாலும் ஏற்கனவே செலவளித்திருக்கும் முதலுக்குக்கூட தேறாது. பயிர்களுக்கு ஏற்ப நிவாரணம் வழங்க வேண்டும். மழையால் வேலையின்றி தவிக்கும் விவசாயத் தொழி்லாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி 2 நாட்கள் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைப் பார்வையிடுவார் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் கூடுதல் அதிகாரிகளை நியமித்து, கள ஆராய்வு செய்து அறிக்கை கொடுத்தால் தான் அரசுக்கு உண்மை நிலவரம் தெரிய வரும். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஒழுங்காக இழப்பீடு கிடைக்கும். தொடர் மழையால் டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி கடலூர் மாவட்ட சாலைகளும் சேதமடைந்துள்ளன. அரசு இவற்றை சீரமைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.