ராஜாவை திமுக கைவிடும் பேச்சுக்கே இடமில்லை-கருணாநிதி
ராஜா, அவரது உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர்களில் வீடுகளில் நேற்று அதிரடி சிபிஐ சோதனை நடந்தது. இந்த சோதனை குறித்து முதல்வர் கருணாநிதியை செய்தியாளர்கள் சந்தித்து பல்வேறு கேள்விகளை கேட்டனர். அவையும், அவற்றுக்கு முதல்வர் அளித்த பதில்களும்:
கேள்வி - டெல்லி, சென்னை, பெரம்பலூர் ஆகிய நகரங்களில் உள்ள ராஜாவின் இல்லங்களில் சி.பி.ஐ. சோதனை நடைபெற்றுள்ளதே?
கருணாநிதி - சி.பி.ஐ. சோதனைகள் நடைபெறுவது ஒன்றும் பெரிதாகப் பேசப்படுகின்ற விஷயம் இல்லையே!
கேள்வி - சி.பி.ஐ. சோதனை நடைபெற்றதை அவமானகரமான ஒன்றாக கருதுகிறீர்களா?
கருணாநிதி - அப்படி நினைக்கவில்லை. ஆனால் அவமானத்திலேயே ஊறியவர்கள் சிலர் நாட்டிலே இருக்கிறார்கள்.
கேள்வி - ராஜா கட்சியிலிருந்து ஓரம் கட்டப்படுவார் என்று சொல்லப்படுகிறதே?
கருணாநிதி -அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், அதற்குப் பிறகு கட்சி தயவு தாட்சண்யம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கும், அதுவரையில் நான் எதுவும் சொல்வதற்கில்லை. ராஜா எந்தத் தவறும் செய்ய வில்லை என்று தி.மு.க. நம்புகிறது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுகிற வரையில் நாங்கள் ராஜாவைக் கைவிடத் தயாராக இல்லை.
கேள்வி - இன்று ஜெயலலிதா விடுத்த அறிக்கையில் காங்கிரஸ் கட்சியை நீங்கள் பிளாக்-மெயில் செய்வதாகச் சொல்லியிருக்கிறாரே?
கருணாநிதி - பிளாக்மெயில் செய்கின்ற கலை எல்லாம் ஜெயலலிதாவுக்குத் தான் மிகவும் அத்துப்படியான விஷயம்.
கேள்வி -சி.பி.ஐ. விசாரணையை விரிவாக்கி அது பற்றி தோண்டினால் மேலும் விவரம் கிடைக்கும் என்றும் ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?
கருணாநிதி - அந்த அம்மையாரிடம் கூட சி.பி.ஐ. விசாரித்தால் எவ்வளவோ கிடைக்கும். ஏற்கனவே கிடைத்திருக்கிறது.
கேள்வி - பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டுக் குழு வேண்டும் என்பதைப் பற்றி?
கருணாநிதி - அதைப்பற்றி இன்றையதினம் உச்ச நீதிமன்ற நிதிபதிகள் பா.ஜ.க. ஆட்சிக் காலத்திலிருந்தே ஸ்பெக்ட்ரம் பிரச்சனை பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள்.
கேள்வி - நீங்கள் ஒரு கட்சியின் தலைவராக அதற்குத் தயாராக இருக்கிறீர்களா?
கருணாநிதி - என்றைக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடங்கியதோ, அதற்குப் பிறகு நடைபெற்ற ஆட்சிக் காலங்களில் அந்த ஒதுக்கீடுகள் எப்படி நடந்தன என்று விசாரிக்கப்பட வேண்டும். அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
கேள்வி -சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு நீதிபதியுடன் ராஜா பேச முனைந்ததாக ஒரு வழக்கிலே கூறப்பட்டதைப் பற்றி?
கருணாநிதி - அவர் மீதான அந்தக் குற்றச்சாட்டை, ராஜாவே மறுத்திருக்கிறார்; அவ்வளவுதான் எனக்குத் தெரியும் என்று பதிலளித்தார் கருணாநிதி.