மோசமான சாலைகள்-தேங்கிக் கிடக்கும் மழை வெள்ளம்-கொந்தளித்த மக்கள்-திமுக எம்.எல்.ஏ. முற்றுகை
சென்னை: சமீபத்திய மழை வெள்ளத்தால் படு மோசமான நிலைக்குப் போய் விட்ட சாலையை சீரமைக்காதது, நிவாரண உதவி எதுவும் கிடைக்காதது, தேங்கிக் கிடக்கும் மழை வெள்ளத்தை அகற்ற நடவடிக்கை எடுக்காதது ஆகிய காரணங்களால் கொந்தளித்த மக்கள் திமுக எம்.எல்.ஏ. புரசைவாக்கம் ரங்கநாதனை இன்று முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
சென்னையின் பல பகுதிகளில் சமீபத்தி்ல் பெய்த மழையால் தேங்கிய நீர் இன்னும் கூட வடியாமல் உள்ளது. வேளச்சேரியின் சில பகுதிகள், மடிப்பாக்கம் உள்ளிட்ட சில பகுதிகள் என ஆங்காங்கு பல பகுதிகள் இன்னும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.
இந்த நிலையில் வில்லிவாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ புரசை ரங்கநாதன் இன்று தனது தொகுதிக்குட்பட்ட அயப்பாக்கம் பகுதியில் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்யச் சென்றார். மோசமான சாலைகள், குண்டும் குழியுமாக மாறி வாகனங்கள் போகக் கூட முடியாத நிலையில் இருப்பதாலும், வெள்ள நீரை வடிய வைக்க உரிய நடவடிக்கைள் எடுக்கப்படாததாலும், நிவாரண உதவிகள் கூட முறையாக கிடைக்காததாலும் ஆத்திரத்தில் இருந்த மக்கள் ரங்கநாதனை சூழந்து கொண்டு கோஷமிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் ரங்கநாதனுக்கு பொதுமக்களால் பாதிப்பு வந்து விடாத வகையில் பாதுகாப்பாக நின்று கொண்டனர். ஆத்திரத்துடன் இருந்த மக்களை அமைதிப்படுத்திய ரங்கநாதன், அனைத்து உதவிகளும் விரைவுபடுத்தப்படும் என்று உறுதியளித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
ரங்கநாதனாவது தனது தொகுதி மக்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்த கவலையுடன் போய்ப் பார்த்துள்ளார். ஆனால் சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளில் மழை நீரால் சூழப்பட்டுள்ள பல பகுதிகளைப் பார்வையிட சம்பந்தப்பட்ட தொகுதி எம்.எல்.ஏக்கள் இதுவரை வரவே இல்லை. நமது தொகுதியில் என்ன நிலவரம் என்பதை பற்றிய கவலை கூட இல்லாத நிலையில்தான் அவர்கள் உள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்று திமுகவும், அதிமுகவும் தனது கட்சித் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அப்படி ஒன்று நடப்பதாக இதுவரை தெரியவில்லை.