கத்தாரில் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க அரசு செலவில் நடவடிக்கை-கருணாநிதி
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கடியப்பட்டினம், முட்டம், கன்னியாகுமரி, இணையம், கோவளம், பெரியவிளை, கொட்டில்பாடு, சைமன்காலனி, குளச்சல் ஆகிய மீனவ கிராமங்களைச் சார்ந்த மீனவர்கள் சவூதி அரேபியா, பஹ்ரைன் போன்ற அரபு நாடுகளில் மீன்பிடிப் படகுகளில் மீன்பிடித் தொழிலாளர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர்.
கடலில் மீன் பிடிக்கும்போது, கத்தார் நாட்டு எல்லைக்குள் சென்றதற்காக, அந்நாட்டுக் கடலோரக் காவற்படை அதிகாரிகளால் 49 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அந்நாட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் 19 பேர் நேற்று விடுதலை செய்யப்ட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் படகு உரிமையாளர்கள் கைவிட்டுள்ள நிலையில், அம்மீனவர்களைச் சிறையிலிருந்து வெளிக்கொணருவதற்கான வழக்கு மற்றும் நீதிமன்றச் செலவினங்களைத் தமிழக அரசே ஏற்கும் என முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.