கோவையில் ராகுல் கொடும்பாவியை எரிக்க முயன்ற 6 பேர் கைது
கோவை: கோவையில் ராகுல் காந்தியின் உருவபொம்மையை எரிக்க முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்து அமைப்புகள் குறித்து ராகுல் காந்தி கூறிய கருத்துகளை விக்கிலீக்ஸ் வெளியிட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராகுலின் கருத்திற்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் கோவை காந்திபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல் முன் ராகுல் காந்தியின் உருவ பொம்மையை எரிக்கப் போவதாக பாரத்சேனா என்னும் அமைப்பு அறிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து தமிழ்நாடு ஹோட்டல் முன் உதவி கமிஷனர் முத்துராஜ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போராட்டக்காரர்களை கைது செய்து அழைத்துச் செல்ல 6 வேன்களும் நிறுத்தி வைக்கப்பட்டன.
அப்போது திடீர் என்று ஒரு கார் வந்தது. அதில் இருந்து பாரத்சேனா மாவட்ட அமைப்பாளர் குமரேசன் தலையில் 6 பேர் இறங்கினர். அவர்கள் ராகுலுக்கு எதிராக கோஷம் எழுப்பிக் கொண்டே தாங்கள் கொண்டு வந்த ராகுலின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.
இதைப் பார்த்த போலீசார் பாய்ந்து சென்று அதை தடுத்தனர். ராகுல் உருவபொண்மைய போலீசாரும், பரத்சேனாவினரும் ஆளுக்கொரு பக்கம் பிடித்து இழுக்க அது துண்டுகள் ஆனது. இதையடு்தது போலீசார் அந்த 6 பேரையும் கைது செய்தனர்.