திமுக-காங்கிரஸ் வெற்றி கூட்டணி நீடிக்கும்: தங்கபாலு
காங்கிரசின் 126வது ஆண்டு தொடக்க தினத்தையொட்டி இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை எங்கும் எதிலும் காங்கிரஸ் என்ற நிலையை உருவாக்க வேண்டும். சோனியா, ராகுல் வழியில் ஒளிமயமான இந்தியாவையும், உன்னதமான தமிழகத்தையும் படைப்போம் என காங்கிரசின் 126வது ஆண்டு தொடக்க நாளான இன்று நாங்கள் உறுதி ஏற்கிறோம்.
இந்தியாவில் 125 ஆண்டுகளாக இணையற்ற பயணம் செய்து வரும் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் தனி இடம் பிடித்துள்ளது. காமராஜர், கக்கன் போன்ற தலைவர்கள் வரலாறு படைத்த கட்சி இது என்றார்.
கேள்வி: திமுக-காங்கிரஸ் கூட்டணியை இளங்கோவன் விமர்சிக்கிறார். அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறாரே?
பதில்: உன்னதமான இந்த நாளில் நல்ல செய்தியை மட்டுமே பேச விரும்புகிறேன். கூட்டணி பற்றி கட்சி தலைமை தான் முடிவு செய்யும். அன்னை சோனியாவின் முடிவு தான் உறுதியானது, இறுதியானது. திருச்சி பொதுக் கூட்டத்தில் சோனியா பேசும்போது திமுக கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணி கட்சிகளை மதிக்கிறோம் என்றார். சோனியா காட்டிய பாதையில் வெற்றி நடைபோடுகிறோம். திமுக-காங்கிரஸ் கூட்டணி வலுவானது. இந்த வெற்றி கூட்டணி தொடர்கிறது.
கூட்டணி பற்றி பேச யாருக்கும் உரிமை இல்லை. சோனியா தான் முடிவு எடுப்பார் என்று ராகுல் காந்தி அறிவித்திருக்கிறார். மீண்டும் ராகுல் காந்தி தமிழகம் வர இருக்கிறார். தமிழகத்தில் உள்ளாட்சி இடைத் தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி போட்டியிடுகிறது. வேட்பாளர் பட்டியல் இன்று மாலை அல்லது நாளை வெளியிடப்படும் என்றார்.