கே.ஜி.பாலகிருஷ்ணன் குடும்ப ஊழல் குறித்து விசாரிக்க வேண்டும்-வி.ஆர்.கிருஷ்ணய்யர் கோரிக்கை

கேரளாவின் ஒரு டிவி சேனலில் கே.ஜி.பாலகிருஷ்ணன் குடும்பத்தினர் பெருமளவில் சொத்துக்களைக் குவித்துள்ளதாகவும், பல்வேறு நகரங்களில் மிகப் பெரிய அளவுக்கு அவர்கள் சொத்துக்களை சட்டத்திற்குப் புறம்பாக வாங்கி குவித்துள்ளதாகவும் செய்தி வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதியை முன்னாள் அமைச்சர் ராசா மிரட்டியதாக எழுந்த சர்ச்சையில் கே.ஜி.பாலகிருஷ்ணன் பெயரும் அடிபட்டது. ராசாவை காப்பாற்றும் நோக்கில் அவர் செயல்பட்டதாகவும் சர்ச்சைகள் வெடித்தன. ராசாவின் பெயரைக் குறிப்பிட்டு கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு கடிதம் போனதாக ரகுபதி கூறினார்.ஆனால் அதை பாலகிருஷ்ணன் மறுத்தார்.ஆனால் ரகுபதி எழுதிய கடிதத்தை நான்தான் பாலகிருஷ்ணனுக்கு அனுப்பி வைத்தேன் என்று விளக்கினார் ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே. இதனால் பாலகிருஷ்ணன் சர்ச்சையில் சிக்கினார்.
இந்த நிலையில் பாலகிருஷ்ணனின் குடும்பம் சொத்துக் குவிப்பு சர்ச்சையில் சிக்கியுள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணய்யர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியான கிருஷ்ணய்யர், இந்தியாவின் முன்னணி மனித உரிமை ஆர்வலரும் கூட. தூக்குத் தண்டனைக்கு எதிராக தீவிரமாக குரல் கொடுத்து வருபவர்.
பாலகிருஷ்ணன் குடும்பத்தினர் மீதான புகார்கள் குறித்து அவர் கூறுகையில்,
நான் நீதிபதியாக இருந்தேன் என்பது இப்போது எனக்கு அருவெறுப்பாக உள்ளது. தலித் சமுதாயத்தைச் சேர்ந்த கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமை நீதிபதியாக உயர்ந்தபோது புதிய அத்தியாயம் மலர்ந்துள்ளதாக பெருமைப்பட்டேன். ஆனால் இப்போது அப்படி நான் நினைக்கவில்லை.
பாலகிருஷ்ணனின் மகள், மருமகன், மாமியார் மீது ஊழல் புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து தலைமை நீதிபதிகள் அடங்கிய கமிஷனை அமைத்து தீவிரமாக விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும். பாலகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்களின் சொத்துக்கள், அவருடைய வங்கி கணக்கு விவரங்கள் குறித்து விரிவாக விசாரிக்கப்பட வேண்டும்.
இந்த விசாரணைக் கமிஷனை பிரதமர் உடனடியாக அமைக்க வேண்டும். இதற்கு நாடாளுமன்றம் விரைவாக ஒப்புதல் தர வேண்டும். மேலும், தற்போது தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக உள்ள கே.ஜி.பாலகிருஷ்ணன் உடனடியாக பதவி விலக வேண்டும் என குடியரசுத் தலைவர் உத்தரவிட வேண்டும் என்றார் கிருஷ்ணய்யர்.
பாலகிருஷ்ணனின் மருமகன் ஸ்ரீனிஜின் கேரள மாநில காங்கிரஸ் கட்சியில் உள்ளார். இவர் 2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் நரக்கல் தொகுதியிலிருந்து போட்டியிட்டார்.
அப்போது அவர் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த சொத்துக் கணக்கு விவரத்தில், ஒரு சொத்தும் தனது பெயரில் கிடையாது என்றும், மனைவியிடம் வெறும் ரூ. 4.38 லட்சம் பெறுமானமுள்ள நகைகளும், ரூ. 1 லட்சம் ரொக்கமும் மட்டுமே இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் 3 ஆண்டுகள் கழித்து ஸ்ரீனிஜினும் அவரது மனைவி சோனியும் (இருவரும் வக்கீல்கள்) வருமான வரித்துறையிடம் தாக்கல் செய்த ரிட்டர்ன் படிவத்தில், ரூ. 35 லட்சம் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் தற்போது இவர்கள் வசம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. திருச்சூரில் மிகப் பெரிய ரிசார்ட் ஒன்றையும் இவர்கள் கட்டி வருகின்றனராம்.
இவர்கள் வசம் தற்போது உள்ள சொத்துக்களின் மதிப்பு, அவர்கள் பதிவு செய்தபோது சொன்ன தொகையை விட பல மடங்கு அதிகமாகுமாம்.
கே.ஜி.பாலகிருஷ்ணன் குடும்பத்தினரின் சொத்து விவரங்கள் குறித்து தற்போது தெரிய வந்துள்ளவை மிகச் சிறிய அளவிலானவைதான். உரிய விசாரணை நடத்தினால் மிகப் பெரிய ஊழலையும், சொத்துக் குவிப்பையும் நாட்டு மக்கள் அறிய முடியும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவு மாநிலத் தலைவர் ராஜேஷ் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், துபாய், பெங்களூரில் பாலகிருஷ்ணன் குடும்பத்தினரும், உறவினர்களும் மிகப் பெரிய அளவில் சொத்துக்களைக் குவித்துள்ளனர். தமிழகத்திலும் பெரிய அளவில் அவர்கள் சொத்துக்களை வைத்துள்ளனர். பாலகிருஷ்ணன்தான் இந்த சொத்துக் குவிப்பின் மையப் புள்ளியாக தெரிகிறார். எனவே இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமாகும் என்றார்.
சமீபத்தில் டெல்லியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் பர்குவான் என்பவர், கடந்த ஜூன் மாதம் துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், பாலகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பெருமளவில் சொத்துக்கள் உள்ளன. இவை பாலகிருஷ்ணன், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான பின்னர்தான் வாங்கப்பட்டுள்ளன. எனவே இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.
இந்தப் புகார் கடிதத்தை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தார் அன்சாரி. உள்துறை அமைச்சகம் அக்கடிதத்தை சிபிஐக்கு அனுப்பியது. தற்போது இக்கடிதம் சிபிஐயின் கொச்சி அலுவலகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications