கரூரில் பஸ் கட்டணம் திடீர் உயர்வு-மக்கள் அவதி
கரூர்: கரூர் மாவட்டத்தில் தனியார் பேருந்துகளில் சட்டத்திற்கு புறம்பாக அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் திருச்சி, ஈரோடு, திண்டுக்கல், தாராபுரம், திருப்பூர் மார்க்கத்தில் செல்கின்றன. அந்தப் பேருந்துகளில் ஒரு ரூபாய் முதல் மூன்று ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதே போன்று கரூர் மாவட்டத்தில் பல்வேறு வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயங்கி வருகின்றன.
இந்த சிற்றுந்துகளில் திடீர் என கட்டணம் ரூ. 1 முதல் ரூ. 3 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து கேள்வி கேட்கும் பயணிகள் நடுவழியில் இறக்கிவிடப்படும் கொடுமையும் நடக்கின்றது.
இது குறித்து கரூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி, கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி, கரூர் எம்.பி. தம்பித்துரை உள்ளிட்ட பலரிடம் புகார் கூறியும் இது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சில தனியர் பேருந்து நிர்வாகிகள் போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரிகள் ஆலோசனைப்படியே இது போன்று செயல்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. இந்த செயல் தேர்தல் நேரத்தில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.