நாகர்கோவில் அருகே மீனவர் வெட்டிக்கொலை : போலீஸ் குவிப்பு
ஈத்தாமொழி: நாகர்கோவில் அருகே பெரியகாட்டில் 7 பேர் கொண்ட கும்பலால் வெட்டப்பட்ட மீனவர் சிகி்ச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து அங்கு 2வது நாளாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாகர்கோவிலை அடுத்த ஈத்தாமொழி அருகேயுள்ள பெரியகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். மீனவர். கடந்த 25-ம் தேதி கிறிஸ்துமஸ் விழாவின் போது ராஜாக்கமங்கலத்தைச் சேர்ந்த சிலர் அந்த பகுதியில் தகராறு செய்துள்ளனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் செல்வராஜ் கலந்துகொண்டுள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் செல்வராஜ் வீட்டுக்கு ஒரு கும்பல் வந்தது. அப்போது வீட்டு வாசலில் படுத்திருந்த அவரை அந்த கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இந்த சத்தம் கேட்டு செல்வராஜின் மனைவி பெரியநாயகி மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. ரத்த வெள்ளத்தில் மிதந்த செல்வராஜை ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விவகாரம் நேற்று காலை பெரியகாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வெட்டிய கும்பல் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்களை கைது செய்ய வேண்டும் என ஊர் மக்கள் திரண்டு பெரியகோவில் சந்திப்பு பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். 2 அரசுப் பேருந்துகளும் சிறை பிடிக்கப்பட்டன.
பொதுமக்களின் இந்த போராட்டம் குறித்து அறி்ந்ததும் அகஸ்தீவரம் தாசில்தார் நாகராஜன், டிஎஸ்பி சக்திவேல், இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications