நடிகர் சூர்யாவுக்கு 'ட்ரெயினிங்' கொடுத்த ஆந்திர தாதா சுட்டுக் கொலை

ராம்கோபால் வர்மாவின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ரத்த சரித்திரம். இந்த படம் இந்தி, தெலுங்கு மொழிகளிலும் வெளியானது. இந்த படத்தில் மத்தலசெருவு சூரி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்து இருந்தார்.
இந்த படத்தில் பரிதாலா ரவி என்ற கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராய் நடித்து இருந்தார்.
பரிதாலா ரவியும், சூரியும் ஆந்திராவைக் கலக்கிய பிரபல தாதாக்கள் ஆவர். இவர்களுக்கிடையிலான மோதலில் பல உயிர்கள் சிதறுண்டு போயுள்ளன. ரவி, தெலுங்கு தேசம் ஆட்சியின் போது அமைச்சராகவும் இருந்தவர்.
மத்தலசெருவு சூரியும், பரிதாலா ரவியும் ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மத்தலசெருவு சூரி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். இருவருக்கும் இடையே கோஷ்டி மோதல் இருந்து வந்தது. ஏற்கனவே பல வழக்குகளில் கைது செய்யப்பட்ட மத்தலசெருவு சூரி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் பரிதாலா ரவி கடந்த 2005-ம் ஆண்டு ஜனவரி 24-ந் தேதி அனந்தப்பூர் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார். (பரிதாலா ரவியின் மனைவி பரிதாலா சுனிதா தற்போது தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.) இந்த கொலை வழக்கில் மத்தலசெருவு சூரி முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். கடந்த அக்டோபர் மாதம் இவர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் மத்தலசெருவு சூரி நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார்.
மத்தலசெருவு சூரி நேற்று மாலை 5.30 மணிக்கு ஹைதராபாத்தில் ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் உள்ள 13-ம் எண் சாலைக்கு சென்றார். அங்குள்ள ஒரு வணிக வளாகம் அருகே அவர் காரில் இருந்து இறங்கிய போது முகமூடி அணிந்த மர்ம மனிதர்கள் 3 பேர் அவரை துப்பாக்கியால் சுட்டு விட்டுத் தப்பி ஓடி விட்டனர். மத்தலசெருவு சூரியின் தலை உள்ளிட்ட இடங்களில் குண்டுகள் பாய்ந்தன.
இதனால் படுகாயம் அடைந்த அவரை அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார் என்று ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் ஏ. கே. கான் தெரிவித்தார்.
உடன் வந்தவரே போட்டுத் தள்ளினார்!
இந்த சம்பவம் குறித்து கான் கூறுகையில்,
பாலாநகரில் உள்ள வழக்கறிஞரை பார்த்துவிட்டு யூசுப்குடா அருகில் உள்ள மதுராநகர்-கிருஷ்ணா நகர் ரோட்டில் சென்று கொண்டிருக்கையில் தான் இந்த தாக்குதல் நடந்தது. குண்டு சத்தம் கேட்டவுடனே சூரி என் மீது சாயந்துவிட்டார். காரில் இருந்த பானு யாரோ தாக்குகிறார்கள் என்று காரை வேகமாக ஓட்டும்படி கூறினார் என்றார். சிறிது தூரம் சென்ற பிறகுதான் கார் நிறுத்தப்பட்டிருக்கிறது. அப்போது பானு காரில் இருந்து இறங்கி ஓடிவிட்டார்.
கார் கண்ணாடி மூடப்பட்டுதான் இருந்திருக்கிறது. குண்டுகள் வெளியில் இருந்து வந்ததற்கான தடையம் எதுவும் இல்லை. தலைமறைவாகியுள்ள பானு மீது சந்தேகம் உள்ளது. அவரைப் பிடித்தால் உண்மை வெளிவரும் என்று கான் தெரிவித்தார்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்த ஒரே சாட்சி டிரைவர் தான். பானுவை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். சூரியின் டிரைவர் நேற்று வேலைக்கு வராததால் தான் அவர் மதன் மோகன் ரெட்டி மற்றும் பானுவுடன் சென்றுள்ளார்.
சூரியின் கார் டிரைவர் மதுமோகன் ரெட்டியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 பேரை குண்டுவெடிப்பில் கொன்றவர் சூரி
கடந்த 1997-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி ஜூபிளி ஹில்ஸில் நடந்த குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியே சூரி தான். ராம நாயுடு ஸ்டுடியோ அருகில் நடந்த இந்த தாக்குதலில் 26 பேர் பலியாகினர். இது ஸ்ரீ ராமுலையா என்ற படத்தை வெளியிட வந்த பரிதாலா ரவியைக் குறிவைத்து நடத்தப்பட்டது. இந்த வழக்கில் சூரிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். அந்தக் குண்டுவெடிப்பில் காயங்களுடன் ரவி தப்பினார் என்பது நினைவிருக்கலாம்.
நடிகர் சூர்யாவுக்கு ட்ரெயினிங்...
மத்தலசெருவு சூரி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மிகவும் துரதிருஷ்டமானது என்று 'ரத்த சரித்திரம்' படத்தில் அவரது கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சூர்யா கூறியுள்ளார்.
ரத்த சரித்திரம் படம் ஆரம்பிக்கும் முன், அந்த கதாபாத்திரம் பற்றி முழுவதுமாக அறிந்து கொள்ள சூரியை சிறைக்கே போய் சந்தித்தவர் சூர்யா. அவரிடம்தான் ரவுடி கெட்டப்புக்கு ட்ரெயினிங் எடுத்துக் கொண்டதாக பெருமையுடன் பிரஸ் மீட்டில் சூர்யா தெரிவித்தார்.
இன்னொரு பக்கம், ரத்த சரித்திரம் படம்தான் சூரியின் மரணத்துக்கு காரணமாகிவிட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. அடங்கிக் கிடந்த பகையை இந்தப் படம் விசிறிவிட்டது என்றும், சூரி சுட்டுக் கொள்ளப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம் என அவரது ஆதரவாளர்கள் ஆவேசத்துடன் கூறினர்.












Click it and Unblock the Notifications