மீனவர் ஜெயக்குமார் படுகொலை-பிரணாப் முகர்ஜியிடம் கருணாநிதி புகார்
சென்னை: நாகை மாவட்ட மீனவர் ஜெயக்குமார் இலங்கைக் கடற்படையால் படுகொலை செய்யப்பட்ட செயலை இன்று தன்னை சந்தித்த நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் கூறி இலங்கையின் செயலை தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
இதுதொடர்பாக தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஜெயக்குமார் (வயது 28) மற்றும் இருவர், 22 1 2011 காலை ஜெயக்குமாரின் அண்ணன் திலகன் என்பவருக்குச் சொந்தமான படகு ஒன்றில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.
22.01.2011 இரவு 11 00 மணியளவில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினர் அவர்களை இடைமறித்துத் தாக்கியதில் ஜெயக்குமார் இறந்து விட்டதாகவும், மற்றும் இருவர் தாக்குதலில் இருந்து தப்பித்து கரை சேர்ந்திருப்பதாகவும் தெரிகிறது.
இதனை அறிந்த முதல்வர் கருணாநிதி இன்று (23 1 2011) தன்னைச் சந்தித்த மத்திய நிதித் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் இச்சம்பவத்திற்கு தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொண்டதுடன், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருவதைச் சுட்டிக்காட்டி, இது தொடரா வண்ணம் இலங்கை அரசோடு பேசி உரிய நடவடிக்கையை விரைவில் மேற்கொள்ள வேண்டுமென்றும், இத்தாக்குதலில் ஈடுபட்ட இலங்கைக் கடற்படையினர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசு இலங்கை அரசினை வற்புறுத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
இத்தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த மீனவர் ஜெயக்குமார் குடும்பத்திற்கு முதலமைச்சர் அவர்கள் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டதுடன், அவரது குடும்பத்தாருக்கு ஐந்து இலட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கிட இன்று உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications