தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்ற கோரிக்கை - நீதிபதி ஜனார்த்தனம் தலைமையில் குழு அமைப்பு
மதுரை: தேவேந்திரகுல வேளாளர் பிரிவின் அனைத்து உட்பிரிவுகளையும் இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்றே பெயர் மாற்றம் செய்யக் கோரி எழுந்த விவகாரம் குறித்து விசாரிக்க நீதிபதி ஜனார்த்தனம் தலைமையில் தமிழக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது,
குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையர், தேவேந்திரகுலத்தார், பள்ளர், வாதிரியார் ஆகிய ஏழு பிரிவுகள் தேவேந்திர குல வேளாளர் என்ற சமூகத்தின் உட்பிரிவுகள் ஆகும்.
அந்த உட்பிரிவுகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து, தேவேந்திர குல வேளாளர் என பெயர் மாற்றம் செய்து ஆணையிட வேண்டும் என்று தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளையின் தலைவர் ம. தங்கராஜ் கடையநல்லூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பீட்டர் அல்போன்ஸ் மூலமாக வைத்த கோரிக்கை தமிழக அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.
இந்தக் கோரிக்கை குறித்து முதல்வர் கருணாநிதி தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதில் நிதியமைச்சர் அன்பழகன், உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, ஆதி திராவிடர் நலத் துறை அமைச்சர் ஆ. தமிழரசி, பால்வளத் துறை அமைச்சர் உ. மதிவாணன், சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரை மாற்றுவது குறித்து சட்ட ரீதியாகப் பரிசீலனை செய்ய நீதியரசர் ஜனார்த்தனம் தலைமயில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு இந்த விவகாரம் குறித்து பரிந்துரை செய்யும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications