மக்கள் சாவதை விரும்பவில்லை, ஜல்லிக்கட்டை தடை செய்யலாமா?-சுப்ரீம் கோர்ட் கேள்வி
டெல்லி: வீர விளையாட்டாயினும் மக்கள் சாவதைத் தடுக்க ஜல்லிக்கட்டை தடை செய்யலாமா? என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி விடுத்துள்ளது. மக்கள் சாவதை நாங்கள் விரும்பவில்லை, நீங்கள் விரும்புகிறீர்களா என்றும் அது கேட்டுள்ளது.
விலங்குகள் நல வாரியம் ஜல்லிக்கடை தடை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது. அந்த மனு நேற்று நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், ஏ.கே.பட்நாயக் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது விலங்குகள் நல வாரியம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராஜ் பஞ்ச்வானி ஆஜரானார். அவர் தமிழகத்தில் கடந்த ஜனவரி 14-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் 2 பேர் பலியாகினர், 215 பேர் காயம் அடைந்துள்ளனர் என்று கூறினார்.
அவர் வாதத்தை கேட்ட நீதிபதிகள் தமிழக அரசு வழக்கறிஞரிடம் கூறியதாவது,
ஜல்லிக்கட்டுக்கு ஐந்தே நாட்களில் 2 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 200 முதல் 300 பேர் வரை காயம் அடைந்துள்ளனர். நீதிமன்ற கண்காணிப்பையும், விதிமுறைகளையும் மீறி இந்த விபரீதம் நடந்திருக்கிறது என்பது வேதனை அளிக்கிறது. மக்கள் சாவதை நாங்கள் விரும்பவில்லை. எனவே, ஜல்லிக்கட்டை தடை செய்யலாமா?
ஜல்லிக்கட்டை தடை செய்து தான் ஆக வேண்டும் என்று கூறவில்லை. இது மரியாதைக்குரிய, பாரம்பரிய விளையாட்டாக இருக்கலாம். ஆனால் அதற்கென சில பாதுகாப்பு நடைமுறைகள் வகுக்கப்பட வேண்டும். ஜல்லிக்கட்டை ஒழுங்குபடுத்த தமிழக அரசு சில கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
ஜல்லிக்கட்டை நடத்தும் ஒரு அமைப்பின் வக்கீல், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் அதிகாரம், மாவட்ட கலெக்டர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று வாதிட்டார்.
உடனே நீதிபதிகள், இன்னும் ஆயிரம் பேர் சாக வேண்டும் என்று விரும்புகிறீர்களா? என்று அவரைப் பார்த்து கேட்டனர். பின்னர் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications