இந்தியன் வங்கியில் போலி ஆவணம் மூலம் ரூ.1.52 கோடி மோசடி: வங்கி முன்னாள் அதிகாரி கைது
தென்காசி: தென்காசி இந்தியன் வங்கி கிளையில் போலி ஆவணம் மூலம் ரூ. ஒரு கோடியே 52 லட்சம் மோசடி செய்ய உடந்தையாக இருந்ததாக மாஜி முதன்மை மேலாளரை சிபிஐ கைது செய்தனர். அவரை ரிமாண்டில் வைக்க மதுரை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருநெல்வேலி மாவட்டம் தென்காசியைச் சேர்ந்தவர் ஈஸ்வர். அவர் தென்காசி இந்தியன் வங்கி கிளையில் முதன்மை மேலாளராக இருந்தார். இந்த வங்கியில் தென்காசி எஸ்ஏஎஸ் அன் கம்பெனி, சாகுல் அமீது ராவுத்தர் அன் சன்ஸ் ஆகிய மளிகை பொருள் மொத்த வியாபார நிறுவனங்கள் ஓபன் சேஸ் கிரடிட் (ஒரு கோடியே 25 லட்ச ரூபாய்க்கு மேல் வாணிபம் செய்யும் திட்டம்) கணக்கு வைத்திருந்தன. இந்த கணக்கு வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு 90 லட்சம் ரூபாய் வரை வங்கி கடன் வழங்கலாம். இதன்படி எஸ்ஏஎஸ் நிறுவனத்துக்கு ரூ. 90 லட்சம், சாகுல் அமீது நிறுவனத்துக்கு ரூ. 40 லட்சம் ரூபாயை முதன்மை மேலாளர் ஈஸ்வர் கடந்த 2007-ம் ஆண்டு மார்ச் 20-ம் தேதி வழங்கினார். இந்நிறுவனங்கள் போலி ஆவணங்கள் தாக்கல் செய்து மோசடி செய்ததாகவும், வட்டியுடன் ஒரு கோடியே 52 லட்ச ரூபாய் மோசடிக்கு ஈஸ்வர் துணையாக இருந்துள்ளார் என தணிக்கையின்போது கண்டுபிடிக்கப்பட்டது.
திருநெல்வேலி வட்டார இந்தியன் வங்கி அதிகாரி புகாரின்பேரில் இரண்டு நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஜாஸ்மின், ஷேக்மன்சூர், இஸ்மாயில் கனி, ஆர்.டி.பால் உள்பட 9 பேரை சிபிஐயின் பொருளாதார குற்றபிரிவு அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்தனர். பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஈஸ்வர் தென்காசியில் வசித்து வந்தார். அவரை சிபிஐ நேற்று கைது செய்தது.












Click it and Unblock the Notifications