ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: பிரமோத் மகாஜன், அருண் ஷோரி மீதும் சிவராஜ் பாட்டீல் கமிஷன் குற்றச்சாட்டு

மேலும் இது போன்ற கொள்கையை வகுத்ததிலும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் குழப்பங்களை உருவாக்கியதிலும் பாஜக ஆட்சியில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர்களாக இருந்த பிரமோத் மகாஜன், அருண் ஷோரிக்கும் பங்குண்டு என்றும் கமிஷன் கூறியுள்ளது.
இதில் நடந்த முறைகேடுகள் குறித்து ஆராய்ந்த பாட்டீல் கமிஷன் சமீபத்தில் தனது அறிக்கையை சமர்பித்தது. 143 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையின் தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன.
அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் விவரம்:
முதலில் விண்ணப்பித்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்டது மிகத் தவறான நடைமுறையாகும்.
பிற நாடுகளைப் போல தொலைத்தொடர்பு துறைக்கு விரிவான புதிய சட்டவிதிகள் வரையறுக்கப்பட வேண்டும். ஆஸ்திரேலியா, நியூசிலாந்தைப் போல ரேடியோ கம்யூனிகேசன் சட்டம் இயற்றப்பட வேண்டும்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரங்களை முடிவு செய்ய சுதந்திரமான அமைப்பை உருவாக்க வேண்டும்.
உரிமம் வழங்கப்படும்போது சட்டவிதிகள் முறையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். அதற்கான நடைமுறைகளில் ரகசியமே இருக்கக் கூடாது.
அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலித்து தகுதியானவற்றை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் முன்னுரிமை என்ற பேச்சுக்கே இடமிருக்கக் கூடாது.
ஒவ்வொரு ஒதுக்கீட்டின்போதும் ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்ற நிறுவனங்களின் பெயர், விவரங்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள் அதை மக்களுக்குப் பயன்படும் வகையில் முறையாகப் பயன்படுத்துகிறதா என்பது குறித்தும் தொலைத்தொடர்புத் துறை கண்காணிக்க வேண்டும்.
ஏலம் விடும்போது விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் முன்னதாகவே தெரிவிக்க வேண்டும்.
தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் இப்போதைய உள்துறை கமிஷனை கலைத்துவிட்டு புதிய கமிஷனை அமைக்கப்பட வேண்டும்.
நேர்மையாக நடக்கும் அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பாஜக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த அருண்ஷோரி, பிரமோத் மகாஜன் மற்றும் ராசா ஆகியோர் சம்பந்தப்பட்டுள்ளனர். இதில் 40 அதிகாரிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சம்பந்தப்பட்டுள்ளனர்,
தொலை தொடர்பு துறை செயலாளராக இருந்த ஷியாமல் கோஷ், டி.எஸ்.மாத்தூர், வினோத் வைஷ், பெகுரியா ஆகியோர் விதிமுறைகளை மீறியும் மத்திய அமைச்சரவையின் முடிவுகளை மீறியும் உரிமங்களையும், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டையும் வழங்கி உள்ளனர்.
2003ம் ஆண்டில் பாஜக ஆட்சியில் 2ஜி லைசென்சுகளை வழங்க பல்வேறு கட்ட நடைமுறைகளை பின்பற்றும்படி தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் சிபாரிசு செய்திருந்தது. இதை அப்போதைய மந்திரி அருண்ஷோரி பின்பற்றவில்லை. ஆனால் இந்த முடிவை அப்போதைய கேபினட்டும் ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்த ஒதுக்கீடு சம்பந்தமாக வினோத் வைஷ் தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்திடம் எழுத்து பூர்வமாக ஆலோசனை பெறுவதற்கு பதிலாக டெலிபோன் மூலம் பேசி ஆலோசனை பெற்றுள்ளார். 2003 நம்பவர் மாதம் ஒதுக்கப்பட்ட 2ஜி லைசென்ஸ் தொடர்பாக தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் தலைவர் தொலை தொடர்பு துறைக்கு கடிதம் எழுதி இருந்தார். ஆனால் அதை பின்பற்றாமல் 2001ம் ஆண்டில் வழங்கப்பட்ட கட்டணத்திலேயே வழங்கி உள்ளனர்.
அது மட்டும் அல்லாமல் முதலில் விண்ணப்பித்தவருக்கு முதலில் கொடுப்பது என்ற முறைகளையும் பின்பற்றி உள்ளனர். டாடா டெலி சர்வீஸ், பாரதி செல்லுலார் போன்ற நிறுவனங்களுக்கு சாதகமாக தொலை தொடர்பு துறை முடிவுகளை எடுத்துள்ளது.
2002ம் ஆண்டில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தபோது விண்ணப்பங்களை சரிவர பரிசீலிக்காமல் அப்போதைய அமைச்சர் பிரமோத் மகாஜன், ஷியாமல் கோஷ் உள்ளிட்ட அதிகாரிகள் தங்கள் விருப்பப்டி அதை ஒதுக்கியுள்ளனர் என்று பாட்டீல் கமிஷன் கூறியுள்ளது.
பிரதமர மீது ஷோரி புகார்:
இந் நிலையில் 2ஜி விவகாரத்தில் ஊழல் நடப்பதும், ராசாவின் தலையீடுகள் குறித்தும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முன்பே தெரியும் என்றும், இது குறித்து பிரதமருக்கு தானே தகவல் தந்ததாகவும் அருண் ஷோரி கூறியுள்ளார்.
ஆனால், இதை காங்கிரஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது.












Click it and Unblock the Notifications