177 பவுன் நகை மோசடி-வங்கியில் கிராம மக்கள் உள்ளிருப்பு போராட்டம் - அதிகாரிகள் திணறல்
ராதாபுரம்: கிராம மக்கள் அடகு வைத்த நகைகளை வங்கி அதிகாரிகள் மோசம் செய்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் வங்கியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராதாபுரம் அருகேயுள்ள செட்டிகுளத்தில் பாண்டியன் கிராம வங்கியில் அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் 8 மாதங்களுக்கு முன்பு தங்கள் நகைகளை அடகு வைத்தனர். அதில் 20 பேருக்கு சொந்தமான 177 பவுன் நகைகளை மதிப்பீட்டாளர்கள் ஜெயசீலன், மேலாளர், கேஷியர் ஆகியோர் தனியார் வங்கியிலும், மற்றொருவர் பெயரிலும் மாற்றி அடகு வைத்து ஏமாற்றியுள்ளனர். இதன் மதிப்பு ரூ.26 லட்சத்து 55 ஆயிரம் ஆகும்.
இந்நிலையில் செட்டிகுளம் தமிழரசி என்பவர் தனது 10 பவுன் நகையை திருப்ப சென்றபோது அவருக்கு நகையை திருப்பித் தராமல் அலைக்கழித்தனர். தமிழரசிக்கு நேர்ந்த கதி தங்களுக்கும் ஏற்படும் என பயந்த மற்றவர்களும் அடகு நகைகளை மீ்ட்க வங்கிக்கு வந்தனர். அப்போது அவர்களுக்கும் அதே பதில் கூறப்பட்டது.
இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் விசாரித்ததில் நகைகளை அடகு வைத்ததில் மோசடி நடந்திருப்பது தெரிய வந்தது. பொதுமக்கள் தெரிவித்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி நகை மோசடியில் சம்பந்தப்பட்ட 3 பேரையும் சஸ்பெண்ட் செய்தனர். வங்கி பொது மேலாளர் அடகு வைத்தவர்களுக்கு 916 கேடிஎம் நகை சில மாதங்களில் திருப்பி தரப்படும் என்று கூறினார். இந்நிலையில் கடந்த 5-ம் தேதி பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டனர். நகை அடகு வைத்த 20 பேரிடமும் வங்கி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொது மேலாளர் அடகு வைத்த நகைகள் அனைத்தும் 20 கேரட் என பதிவு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால் அதுபோன்றுதான் நகைகள் வழங்கப்படும் என கூறினார். அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் வங்கியை முற்றுகையிட்டனர்.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் காலை 10 மணிக்கு வங்கி முன் திரண்டனர். முடிவு தெரியும் வரை வங்கியை விட்டு போக மாட்டோம் என பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications