காங்கிரஸ் ஆட்சியின் திட்டங்களால் வளர்ச்சிப் பாதையில் இந்தியா: ப.சிதம்பரம்
சிவகிரி: காங்கிரஸ் ஆட்சியின் திட்டங்களால் தான் இந்தியா வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
நெல்லை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம் சிவகிரியில் உள்ள மகாத்மா காந்தி கலை அரங்கில் நேற்று இரவு நடைபெற்றது. தென்னக ரயில்வே ஆலோசனை குழு தலைவர் காளியப்பன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ப.சிதம்பரம் பேசியதாவது,
இன்றைக்கு மத்திய அரசின் சாதனைகளைப் பற்றி மட்டுமே பேச வந்துள்ளேன். தமிழகத்தில் இன்னும் ஒரு மாதத்தி்ல் தேர்தல் திருவிழா தொடங்க இருக்கிறது. அப்போது எங்கு பார்த்தாலு்ம் விழாக் கோலம் பூண்டிருக்கும். அந்த விழாவில் நமக்கும் பங்கு உண்டு. அப்போது தமிழகத்தின் நிலை குறித்து தெளிவாக பேசுவோம். தற்போது மத்திய அரசின் சாதனைகளை பற்றி மட்டும் பேசுகிறோம்.
கடந்த 2004-ம் ஆண்டு தேர்தலின்போது பாஜக இந்திய ஒளிரும் என்று கூறியது. அந்த தேர்தலில் நாம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தோம். நாம் ஆட்சி அமைத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினோம். காங்கிரஸ் ஆட்சியின் திட்டங்களால் தான் இந்தியா வளர்ச்சிப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. காங்கிரஸ் அரசின் திட்டங்களில் கிராம சாலைகளுக்கு மட்டும் ரூ.12 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த நிதியை மாநில அரசுகள் எந்தவித நிதி கசிவும் இல்லாமல் செயல்படுத்தினால் 48 கிலோ மீட்டர் சாலைகள் அமைக்கலாம். இன்னும் 10 ஆண்டுகளில் நம் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக இருக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியும் என்றார்.