தமிழர்களும், மலையாளிகளும் சகோதரர்களாக வாழ்கின்றனர்: அச்சுதானந்தன் பெருமிதம்
சென்னை: தமிழகத்தில் தமிழர்களும், மலையாளிகளும் மொழி, இனத்தையெல்லாம் தாண்டி சகோதர, சகோதரிகளாக வாழ்கின்றனர் என்று கேரள முதல்வர் அச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.
கேரள சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் சென்னை கிரீம்ஸ் சாலையில் ''கேரளா ஹவுஸ் ஓட்டல் வளாகம்"" கட்டப்பட்டுள்ளது. அதனை நேற்று கேரள முதல்வர் அச்சுதானந்தன் திறந்து வைத்தார். திறப்பு விழாவிற்கு கேரள சுற்றுலாத்துறை தலைவர் செரியன் பிலிப், நிர்வாக இயக்குனர் மோகன்லால் ஆகேயோர் தலைமை வகித்தனர்.
பின்னர் அச்சுதானந்தன் பேசியதாவது,
சென்னை மலையாளிகளுக்கு ஒன்றும் புதிய ஊரன்று. தமிழகத்தில் தமிழர்களும், மலையாளிகளும் மொழி, இனம் ஆகியவற்றைத் தாண்டி சகோதர, சகோதரிகளாக வாழ்கின்றனர். இந்த ஓட்டல் வளாகம் சென்னையில் அமைய பேருதவியாக இருந்த தமிழக முதல்வர் கருணாநிதி, சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் ஆகியோருக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த வளாகம் தமிழக சுற்றுலாத் துறைக்கும் உதவியாக இருக்கும்.
ரூ. 23 கோடி செலவில் கட்டப்பட்டிருக்கும் இந்த ஓட்டலில் அரங்கம், கருத்தரங்கம் அறை, ஓட்டல், விடுதி, ஹெல்த் கிளப் உள்பட 95 அறைகள் உள்ளன. இது வெறும் தங்கும் விடுதியாக மட்டுமன்று கேரளாவின் கொள்கை பரப்பும் மையமாகவும் இருக்கும். டெல்லியில் 1980-ம் ஆண்டும், மும்பையில் 2006-ம் ஆண்டும் கேரள ஹவுஸ் ஓட்டல் வளாகம் திறக்கப்பட்டது. தற்போது சென்னையில் திறக்கப்பட்டுள்ளது. கேரளா சுற்றுலாத் துறையின் தகவல் தொழில்நுட்ப மையம் கொல்கத்தாவில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதேபோன்று மைசூரிலும் விரைவில் அமைக்கப்பட உள்ளது என்றார்.
கேரள உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் கூறியதாவது,
இந்தியாவிலேயே கேரள சுற்றுலாத் துறை முதலிடத்தில் உள்ளது. வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் கேரள சுற்றுலாத் துறை கடந்த ஆண்டில் மட்டும் ரூ. 13200 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது கேரள அரசின் மொத்த வருவாயில் 20 சதவீதம் ஆகும். மேலும், கேரள உள்நாட்டு உற்பத்தியில் 9 சதவீதம். கேரளாவிற்கு ஏராளமான வெளிநாட்டவர்கள் சுற்றுலா வருகின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துலு ஆகியவை திராவிட மொழிகள். தமிழுக்கும், மலையாளத்திற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications