விஜயகாந்த் வருகை... கோயிலில் பக்தர்களுக்குத் தடை!
ஸ்ரீவில்லிபுத்தூர்: விஜயகாந்த் வந்ததால் ஆண்டாள் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் இன்று காலை தரிசனம் செய்ய வந்தார். காலை 5 மணி முதல் 7 மணி வரை கோவிலுக்குள் இருந்த விஜயகாந்த், அவர் செல்லும் பக்கம் எல்லாம் பக்தர்களை அனுமதிக்காமல் கெடு பிடி செய்தனர் தொண்டர்கள்.
விஜயகாந்த் தரிசனம் செய்துவிட்டு புறப்பட்டுவிடுவார். பின்னர் அனைவரும் தரிசனம் செய்யலாம் என்று தேமுதிகவினர் கூறியதை கேட்ட பக்தர்கள் கோபம் அடைந்தனர்.
விஜயகாந்த் ஆண்டாள் கோவிலுக்கு வந்திருப்பதை அறிந்த பத்திரிகையாளர்கள் கோவிலுக்குள் நுழைய முயன்றனர். அப்போது போட்டோ எடுக்க முயன்றவர்களை தேமுதிகவினர் தடுத்து நிறுத்தினர்.
அந்த நேரத்தில் அங்கே அப்போது வந்த விஜயகாந்த், "நான் எப்பவும் கோவிலுக்கு போகிறவன். என்னை ஏன் போட்டோ எடுக்கிறீர்கள். கோவிலுக்கு போகமாட்டேன் என்று கூறிவிட்டு, ஒளிந்து மறைந்து போய் கும்பிடுபவர்களை போட்டோ எடுங்கள்," என்றார்.
ஆண்டாள் கோவிலை விட்டு விஜயகாந்த் கிளம்பிய பிறகே பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
அழகிரி தரப்பு-விஜயகாந்த் சந்திப்பா?:
இந் நிலையில் நேற்று மதுரையில் இருந்த விஜய்காந்த் தங்குவதற்கு தாஜ் ஓட்டலில் அறை புக் செய்யப்பட்டிருந்தது. ஆனால், அதை திடீரென மாற்றி திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் கெஸ்ட் ஹவுஸில் தங்கினார்.
நேற்று இரவு தனது சகோதரியான டாக்டர் விஜயலட்சுமியின் வீட்டில் மனைவி பிரேமலதாவுடன் உணவருந்திவிட்டு பின்னர் மதுரை மத்திய தொகுதியில் காரில் வலம் வந்துள்ளார் விஜயகாந்த். வரும் சட்டமன்றத் தேர்தலில் பிரேமலாதா இந்தத் தொகுதியில் போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது.
திருப்பரங்குன்றத்தில் விஜய்காந்த்தை திமுக மதுரை மாவட்டச் செயலாளரும் மத்திய அமைச்சர் அழகிரியின் வலதுகரமுமான தளபதி சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications