சென்னை திரையரங்கில் இலங்கை தமிழ் மாணவர்களுக்கு அடி-உதை: கமிஷனரிடம் புகார்
சென்னை: சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றில் போலீஸ் உடையில் இருந்த சிலர் இலங்கை தமிழ் மாணவர்கள் இருவரை அடித்து உதைத்து, அவர்களிடம் இருந்த செயினையும், செல்போனையும் பறித்துக் கொண்டதாக பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை யாழ்பாணத்தைச் சேர்ந்தவர்கள் சுதன் (25), கவா (24). அவர்கள் உறவுமுறையில் அண்ணன், தம்பி ஆகும். அவர்கள் இருவரும் கனடாவில் என்ஜினீயரிங் படிக்கிறார்கள். சுதனின் பெற்றோர்கள் சென்னை வில்லிவாக்கத்தில் வசிக்கின்றனர். அவர்களைப் பார்ப்பதற்காக கடந்த 10 நாட்களுக்கு முன் தான் சென்னை வந்துள்ளனர்.
அவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை ஆடுகளம் படம் பார்ப்பதற்காக ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகேயுள்ள வணிக வளாகத்தில் இருக்கும் திரையரங்கிற்கு சென்றுள்ளனர். அங்கு டிக்கெட் விவகாரத்தில் திரையரங்கு ஊழியர்களுக்கும், அவர்களுக்கும் மோதல் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்துப சுதனும், கவாவும் நேற்று பகலில் புகார் கொடுப்பதற்காக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர்.
அப்போது அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது,
திரையரஙகு ஊழியர்கள் எங்களுக்கு டிக்கெட் கொடுக்க மறுத்து தகராறு செய்தனர். ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு அங்கு போலீஸ் உடையில் இருந்த சிலரை கூப்பிட்டு எங்களை லத்தியால் அடிக்கச் செய்தனர். மேலும், அவர்கள் எங்களிடம் இருந்த ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள தங்க செயினையும், ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள செல்போனையும் பறித்துக் கொண்டனர். இது குறித்து தான் போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் கொடுக்க வந்திருக்கிறோம் என்றனர்.
அதற்கு அண்ணாசாலை போலீசார் தெரிவித்ததாவது,
அவர்கள் இருவரும் குடிபோதையில் இருந்ததனால் தான் சினிமா பார்க்க அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து அவர்கள் ரகளை செய்ததால் தியேட்டர் நிர்வாகத்தின் சார்பில் போலீசார் அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் போலீஸ் அங்கு செல்வதற்குள்ளேயே அவர்கள் சென்றுவிட்டனர். இது குறித்து அவர்கள் புகார் செய்யவில்லை. அவ்வாறு செய்திருந்தால் உரிய விசாரணை நடத்தப்படும் என்று தெரிவி்ததனர்.












Click it and Unblock the Notifications