கருப்புப் பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்-பிரதீபா பாட்டீல் பேச்சு

Subscribe to Oneindia Tamil

Pratibha Patil
டெல்லி: சுவிஸ் வங்கிகள் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் போடப்பட்டுள்ள இந்தியர்களின் பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்துடன் தொடங்கியது. கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் பேசியதாவது

வெளிநாட்டு வங்கிகளில் வரி ஏய்ப்பு மூலமாகவும், சட்டவிரோதமாகவும் இந்தியர்கள் போட்டு வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்பதற்கு அரசு உறுதி பூண்டுள்ளது.

இந்தியாவுக்கு சேர வேண்டிய அந்த பணத்தை மீட்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க அரசு தயாராக உள்ளது. அதே சமயத்தில் இந்த பணத்தை வெளிநாடுகளில் போட்டு வைத் துள்ளவர்கள் நடவடிக்கையிலிருந்து தப்ப முடியாது.

அரசு இதுவரை எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக அரசுக்கு கூடுதலாக 34,601 கோடி கிடைத்துள்ளது. 48,784 கோடி அளவுக்கு கூடுதல் வருவாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜி20 நாடுகளின் அமைப்புகள் மூலமாக வெளிநாடுகளில் போடப் பட்டுள்ள பண விவரத்தை கண்டு பிடிக்கவும், அவற்றை மீட்கவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஊழல் புகார்கள் எழுந்துள்ளது குறித்து குறிப்பிட்ட அவர், நமது மக்களுக்கு நல்ல நிர்வாகம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று அரசு உறுதிபூண்டுள்ளது.

பொது வாழ்வில் ஒளிவு மறைவற்ற செயல்பாடு, ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும். ஊழலை ஒழிப்பதற்கு சட்டப்பூர்வ மாகவும், நிர்வாகம் மூலமாகவும் நடவடிக்கை எடுக்க அமைச்சர்கள் குழு தேவையான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டிருக்கிறது.

பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை

இந்திய மண்ணில் வெளிநாட்டு சக்திகள் சதி வேலைகளில் ஈடுபடுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அப்படிப்பட்ட சக்திகளை ஒடுக்காத வரை யாருடனும் நாம் அர்த்தப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை நடத்த முடியாது.

பாகிஸ்தானுடனான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அமைதியான தீர்வையே இந்தியா விரும்புகிறது. இது நடைபெற வேண்டுமானால் அங்கு உருப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம்.

ஒவ்வொரு நாடும் அமைதியுடனும், வளமுடனும் வாழ வேண்டும் என்றே இந்தியா விரும்புகிறது. ஆப்கானிஸ்தானில் கூட அதே நோக்கத்தில்தான் நாம் பல்வேறு உதவிகளைச் செய்தோம். இதை தொடர்ந்து செய்வோம்.

எகிப்தில் இன்று ஜனநாயகம் மலருவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இதை இந்தியா வரவேற்கிறது. மத்திய ஆசியா, இந்தியாவுக்கு முக்கியமான பிராந்தியமாகும்.

சமீபத்தில் இந்தியாவிலிருந்து வங்கதேசம், பூட்டான், மாலத்தீவு, நேபாளம், இலங்கை ஆகிய அண்டை நாடுகளுக்கு இந்திய உயர் மட்டத் தூதுக் குழுக்கள் சென்று வந்துள்ளன. இதன் மூலம் அண்டை நாடுகளுடனான புரிந்துணர்வு மேம்பட்டுள்ளது.

சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய வல்லரசுகளுடன் நமக்கு நல்லுறவு நிலவுகிறது. இதை இந்தியாவின் நலனை மேம்படுத்த உரிய வகையில் இந்தியா பயன்படுத்திக் கொள்ளும் என்றார் பிரதீபா.

உரையைத் தொடர்ந்து இரு அவைகளும் நாளை தனித் தனியாக கூடும். இரண்டு கட்டமாக கூட்டத் தொடர் நடைபெறுகிறது. மார்ச் 16ம் தேதி வரை ஒரு பகுதியும், ஏப்ரல் 4ம் தேதி முதல் 21 வரை அடுத்த கட்டக் கூட்டத் தொடரும் நடைபெறும்.

25ம் தேதி ரயில்வே பட்ஜெட்டும், 28ம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும். தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளதால் அந்த மாநிலங்களுக்கு இந்த பட்ஜெட்டுகளில் கூடுதல் அறிவிப்புகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த குளிர்காலக் கூட்டத் தொடரை, ஸ்பெக்ட்ரம் பிரச்சினை காரணமாக முடக்கிப் போட்டு விட்டன எதிர்க்கட்சிகள். தங்களது ஜேபிசி கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் பட்ஜெட் கூட்டத் தொடரையும் சுமூகமாக நடத்த விட முடியாது என்றும் எச்சரித்துள்ளன. எனவே இக்கூட்டத் தொடர் அமளி இல்லாமல் அமைதியாக நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த நிலையில் அமைதியான முறையில் கூட்டத் தொடர் நடைபெறும் என்று பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று லோக்சபா சபாநாயகர் மீரா குமார் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பின்னர் மன்மோகன்சிங் கூறுகையில், பட்ஜெட் கூட்டத் தொடர் சுமூகமான முறையில் நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். எதிர்க்கட்சியினரின் அனைத்துக் கோரிக்கைகளும் விவாதிக்கப்படலாம். அதற்கு அரசு தயாராகவே உள்ளது.

இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் உருப்படியானதாகவும், உபயோகரமானதாகவும் அமையும் என்று நம்புகிறேன் என்றார்.

ஜேபிசி விசாரணைக்கு அரசு முடிவு

இதற்கிடையே, நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு அரசு தயாராகி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதுதொடர்பான அறிவிப்பு பிப்ரவரி 22ம் தேதி (அதாவது நாளை) நாடாளுமன்றத்தில் வெளியாகும் என்றும் தெரிகிறது.

நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பின்னர் இந்தத் தகவல் வெளியானது. இதன் மூலம் எதிர்க்கட்சிகளை அமைதிப்படுத்தி, நாடாளுமன்றக் கூட்டத்தை அமைதியான முறையில் நடத்த மத்திய அரசு இறங்கி வந்துள்ளது.

ஆறு வார காலம் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத் தொடரில் மொத்தம் 61 மசோதாக்கள் நிறைவேற்றப்படவுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+