பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சஸ்பெண்ட் - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி தட்சிணாமூர்த்தியை சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் விமலா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (53). இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக பணியாற்றி வருகின்றார்.
பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் அனைத்து நீதிமன்றங்களும் இவரது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வந்தன.
இந்த நிலையில் அரியலூர் மாவட்ட வக்கீல்கள், அரியலூரில் மாவட்ட நீதிமன்றம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8-ம் தேதி முதல் நீதிமன்ற புறக்கணிப்பு, சாலை மறியல், கடையடைப்பு என பல கட்ட போராட்டங்களை நடத்தினர்.
இதில், கடந்த 21-ம் தேதி முதல் 22-ம் தேதி இரவு வரை, அரியலூர் கூடுதல் மாவட்ட மற்றும் விரைவு அமர்வு நீதிமன்றத்தை இழுத்து பூட்டி வக்கீல்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து போராட்டக் குழுவினருடன், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால் தலைமையிலான நீதிபதிகள் குழு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் மூன்று நாட்களில் அரசுக்கு அவர்களின் கோரிக்கைகள் பரிந்துரைக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
இப்பிரச்சனைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி தட்சிணாமூர்த்தியை சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் விமலா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications